'ஆரஞ்ச் அலர்ட்..' அடித்து நொறுக்கப் போகும் கனமழை.. இந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்க
சென்னை: காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.
அதேபோல தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்
இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக இன்று முதல் நவ. 2ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்
அதேபோல நவ. 3 மற்றும் 4ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நோரத்குற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நன்னிலம், திருவாரூர், மணமேல்குடி, தலா 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications