"புது அங்கீகாரம்.." சென்னை மெட்ரோ படைத்த வேற லெவல் சாதனை. புகழ்ந்து தள்ளும் பயணிகள்.. வாவ் செம
சென்னை: சென்னை மெட்ரோ இப்போது இரண்டு ரூட்களில் இயங்கி வரும் நிலையில், இதற்கு இப்போது சர்வதேச அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் போக்குவரத்து தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அனைத்து முக்கிய சாலைகளிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறித்த தமிழக அரசு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ: அதிலும் குறிப்பாகச் சென்னையில் உள்ள மெட்ரோ சேவை என்பது அனைவரையும் கவரும் வகையிலேயே இருக்கிறது. குறிப்பாக ஏசி பயணம், சொன்ன நேரத்தில் செல்ல முடிவது உள்ளிட்ட காரணங்களால் ஆபீஸ் செல்வோர் இதையே விரும்பி பயன்படுத்துகிறார்கள். இப்போது சென்னையில் விம்கோ நகர்- ஏர்போர்ட், பரங்கிமலை- சென்டிரல் ரயில் நிலையம் என 54 கிமீ தொலைவுக்கு மெட்ரோ இயக்கப்பட்டு வருகிறது.
இது தவிர மூன்று புதிய ரூட்களில் மெட்ரோ கட்டுமானமும் நடந்து வருகிறது. இந்த புதிய ரூட் 2026 முதல் படிப்படியாகச் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. இந்த மூன்று ரூட்களும் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்தால் விரிவான மெட்ரோ சேவையைக் கொண்டு ஒரு நகரமாகச் சென்னை மாறும். சென்னை மெட்ரோவில் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் அதன் இரண்டு ரயில்களுக்கும் இடையேயான நேர இடைவெளி குறைக்கப்பட்டது,
புது அங்கீகாரம்: தற்போது சென்னை மெட்ரோ வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகிறது. அதேநேரம் வார விடுமுறை, விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ சேவையை அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு முக்கிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. இப்போது சென்னை மெட்ரோ முதல் வழித்தடம் முழுமையாக இயங்கி வரும் நிலையில், அதற்கு ஐஎஸ்ஓ 9001 தர மேலாண்மை சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், அதற்கு ஐஎஸ்ஓ 14001 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புக்கான சான்றிதழும் கிடைத்துள்ளது.
முழு ஆய்வு: ரயில் செயல்பாடுகள், சிக்னல், டிராக்குகள், தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஹெச்ஆர் எனப் பல பிரிவுகளை ஆய்வு செய்து இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ நிறுவனம் ஐஎஸ்ஓ தரத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனது ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆலோசகரை நியமித்துள்ளது.
அந்த ஆலோசனை நிறுவனம், சென்னை மெட்ரோவில் உள்ள 2361 ஊழியர்களுக்கும் ஐஎஸ்ஓ விழிப்புணர்வு பயிற்சி அளித்துள்ளது, சென்னை மெட்ரோ நிரந்தர ஊழியர்கள் மட்டுமின்றி அவுட்சோர்ஸ் ஊழியர்களும் இதில் அடங்குவர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்போது நீல மற்றும் பச்சை வழித்தடத்தில் இரண்டு ரூட்களில் மெட்ரோ இயக்கப்படும் நிலையில், இரண்டு ரூட்களில் இருக்கும் அத்தனை ஸ்டேஷன்களையும் ஆய்வு செய்து இந்த சான்றிதழை வழங்கியுள்ளனர்.
3 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்: இந்த சான்றிதழ் என்பது மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.. ஒவ்வொரு ஆண்டும் இந்த தணிக்கை மீண்டும் ஆய்வு செய்யப்படும். இந்த ஐஎஸ்ஓ சான்றிதழ் என்பது மெட்ரோ சர்வீசுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் மேலும் மெட்ரோ சேவையை உலகத் தரத்தில் எடுத்துச் செல்ல இது உதவும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications