"3+3= 6.."சென்னை மெட்ரோ அதிரடி! எப்போதும் கூட்டமே இருக்காது! இனி எங்க வேண்டுமானாலும் ஜம்முனு போகலாம்
சென்னை: சென்னை மெட்ரோ கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ நிர்வாகம் வரும் காலத்தில் அதை சமாளிக்க மெகா திட்டம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளது.
இந்தியாவில் அதிக கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. அதிகரிக்கும் டிராபிக், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல காரணங்களால் பொதுமக்கள் சென்னையை நோக்கி வருவது எனப் பல காரணங்களால் சென்னையில் டிராபிக் அதிகமாகவே இருக்கிறது.

டிராபிக்கை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட், சென்டிரல் முதல் பரங்கி மலை என இரண்டு வழித்தடங்களில் 54 கிமீ தொலைவிற்கு மெட்ரோ இயங்கி வருகிறது.
மெட்ரோ விரிவாக்கம்: இதற்கிடையே இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க பணிகளும் இப்போது நகரில் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என மூன்று வழித்தடங்களில் சுமார் 110 கிமீ தூரத்திற்கு மெட்ரோ விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே சென்னை மெட்ரோவில் விரைவில் வரும் 2ஆம் கட்டத்தில் ஆரம்பத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், மெட்ரோ பயன்பாடு திடீரென அதிகரித்துள்ள நிலையில், மூன்று பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில்களை இணைக்கவும், அதன்படி மொத்தம் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கவும் சென்னை மெட்ரோ ஏற்பாடு முடிவு செய்துள்ளது.
புது பிளான்: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் என்பது 116 கிமீ தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் அமைகிறது. இந்த ரூட்டில் மூன்று பெட்டிகள் மற்றும் ஆறு பெட்டிகள் என இரண்டு டைப் மெட்ரோ ரயில்களையும் இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், தொடக்கத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்களை மட்டுமே இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டது. டெண்டர் தொடங்கி அதை மனதில் வைத்தே நடவடிக்கை எடுத்தது.
ஆனால், இப்போது முதலாம் கட்ட மெட்ரோவில் பயணிகள் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் இரண்டாம் கட்டத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டத்தை மாற்றுகிறது. அதன்படி இரண்டு மூன்று பெட்டி மெட்ரோவை இணைத்து ஆறு பெட்டிகளைக் கொண்ட மெட்ரோவாக இயக்க முடிவு செய்துள்ளனர்.
கூட்டத்தைச் சமாளிக்க: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "நாங்கள் 3 பெட்டிகளைக் கொண்ட மெட்ரோ ரயில்களுக்கே ஒப்பந்தம் போட்டுள்ளோம். எனவே, இரண்டாம் கட்ட மெட்ரோவுக்கும் மூன்று பெட்டி ரயில்களே இருக்கும், இருப்பினும், இப்போது திடீரென மெட்ரோவில் பயணிக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து இரண்டு மூன்று-பெட்டி ரயில்களை இணைத்து அதை ஆறு-பெட்டி மெட்ரோவாக இயக்க முடிவு செய்துள்ளோம்.
இரண்டாம் கட்ட மெட்ரோ படிப்படியாகவே செயல்பாட்டுக்கு வரும் எனவே, தேவையின் அடிப்படையில் இதைச் செயல்படுத்துவோம். ஏற்கனவே வெளிநாடுகளில் சில இடங்களில் இதுபோல மெட்ரோவை இயக்கி வருகின்றனர். நெரிசல் இல்லாத நேரங்களில் மூன்று பெட்டிகள் கொண்ட மெட்ரோ இயக்கப்படும். பீக் ஹவர்களில் 6 பெட்டிகளைக் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ 2025 இறுதியில் இருந்து படிப்படியாக செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications