பந்தாடிருச்சே! மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.210 கோடி சேதம்!
சென்னை: மிக்ஜாம் புயல் மழை பாதிப்புகளால், மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ.210 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு வாரம் கடந்தும் இன்னும் சில பகுதிகளில் முழுமையாக மழைநீர் வடியாத சூழல் உள்ளது.

மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட கடுமையான ஈடு செய்யும் வகையில், இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 450 கோடியும், சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து 561 கோடி ரூபாயும் மத்திய அரசு விடுவித்தது.
இந்நிலையில் சென்னையை தாக்கிய மிக்ஜாம் மழை, வெள்ள பாதிப்புகளால் மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ.210 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், இரண்டாம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடியும் சேத மதிப்பாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
மிக்ஜாம் புயல் மழை காரணமாக, பொது போக்குவரத்து சேவைகள் கடுமையாக முடங்கியபோதும், மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. சில மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழைநீர் புகுந்தும், மின்சாரம் மற்றும் இணைய சேவையில் சிக்கல்கள் ஏற்பட்டபோதும், மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்து, பயணிகளுக்கு உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications