சென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. விரைவில் வரப்போகுது ஏகப்பட்ட வழித்தடம்.. ஜரூர் பணிகள்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 3-வது, 5-வது வழித்தடத்தில் மின்சார கட்டமைப்புகளுக்காக ரூ.533 கோடியில் விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. இந்த வழித்தடத்தில் அனைத்து வகையான மின்சார பணிகளுக்கான ஒப்பந்தமும் எல்&டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகரில் விமான நிலையம் முதல் விக்கோ நகர் வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், கோயம்பேடு, தேனாம்பேட்டை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

இந்நிலையில் 2-வது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் சுமார் ரூ.69 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 128 ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. பல்வேறு இடங்களில் சுரங்கம் அமைக்கும் இயந்திரங்கள் பணிகளை செய்து வருகின்றன.
ஒவ்வொரு பகுதியாக பணிகளை செய்து முடிக்க நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டு பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம் எல்&டி நிறுவனத்துக்கு ரூ.533.87 கோடியில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் எல்&டி நிறுவனத்தின் ஒப்பந்த துணை மின்நிலைய வணிகப்பிரிவின் தலைவர் ஹெச்.ராஜேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், மாதவரம் பால்பண்ணை-சோழிங்கநல்லூர் வரை 3-வது வழித்தடம், மாதவரம் பால் பண்ணை முதல் சிஎம்பிடி மற்றும் மாதவரத்தில் உள்ள பணிமனையில் துணை மின்நிலையம், துணை கட்டிடம் மற்றும் மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்துதல் அமைப்புக்கான அனைத்து வகையான மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம் எல்&டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது..
3-வது வழித்தடத்தில் 29 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 10 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், 5-வது வழித்தடத்தில் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது என்றார்கள்.
இதனிடையே 3-வது வழித்தடத்தில் 35.043 கி.மீ. நீளத்துக்கும், 5-வது வழித்தடத்தில் 16.16 கி.மீ. நீளத்துக்கும், மாதவரம் பணிமனையில் 21 கி.மீ. நீளத்துக்கும் மேல்நிலை மின்சாரதளம் அமைக்கும் பணிக்கும் எல்&டி நிறுவனத்துக்கு ரூ.239.41 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications