சென்னையில் "டிரைவரே" இல்லாத மெட்ரோ ரயில்.. 3 x 3 பெட்டியுடன் 10 ஆட்டோமெட்டிக் ரயில்கள்.. குட்நியூஸ்
சென்னை: சென்னை மெட்ரோ நிறுவனம் இன்னொரு அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றையும் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடமும் செயல்பட்டு வருகின்றன.

வசதிகள்: மெட்ரோவின் தேவையும் சென்னைவாசிகளுக்கு அத்தியாவசியமாகி வருகிறது.. எனவே, மெட்ரோ நிறுவனமும், பயணிகளின் வசதிகளை கருதி பல்வேறு அதிரடிகளை வெளியிட்டபடியே உள்ளது.
மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சிறப்பு பயண அட்டை மூலம் ஒரு நாள் முழுவதும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு உட்பட Phonepe மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் பெற்றுக்கொள்ளும்படியான வசதி வரை தற்போது கொண்டுவரப்பட்டது.
புது அதிரடி: நேற்றுமுன்தினம்கூட, வெறும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து, அதை அமல்படுத்தியும் காட்டியிருந்தது.. 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை விம்கோ நகர், விமான நிலையம் போன்ற பகுதிகளில் மெட்ரோ சேவையானது 7 நிமிடங்களில் இயக்கப்பட்டது, பயணிகளை கவர்ந்திருந்தது. இந்நிலையில், இன்னொரு அதிரடியையும் மெட்ரோ கையில் எடுத்துள்ளது.
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூபாய் 269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ரயில்கள்: அதாவது, ஏற்கனவே, 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 946 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்களை வழங்க இப்போது, அதே நிறுவனத்துடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.. அந்தவகையில், சென்னை பூவிருந்தவல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் இந்த மெட்ரோ ரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். மொத்தத்தில், ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 3 பெட்டிகளை கொண்டிருக்கும்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், "சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2ன் கீழ், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த ஆண்டு 2022, நவம்பர் 17ம் தேதி வழங்கப்பட்டது.
10 மெட்ரோ ரயில்: இதனைத் தொடர்ந்து, நவம்பர் 27ம் தேதி துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்கள் என மொத்தம் 36 மெட்ரோ ரயில்களை வழங்கும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு 269 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
பராமரிப்பு: வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் ஆகியவையும் ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ ரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications