சோழிங்கநல்லூர் டூ சிப்காட்.. சென்னை மெட்ரோ பயணிகளுக்கு வந்தது அறிவிப்பு.. கையெழுத்தும் போட்டாச்சு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான ரூ.1,134 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை உயர்மட்ட வழித்தடம், மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்கு ஒப்பந்தம் இன்று போடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பணமில்லா பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும், பணப்புழக்கத்தை குறைக்கவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் நிலையில் ப்ரீபெய்டு பயண அட்டைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, புதிதாக வாகனங்களை நிறுத்தவும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயண அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சி.எம்.ஆர்.எல். நிர்வாகத்தால் கடந்த 19ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அப்டேட்: சென்னையில் ரயில் நிலையம் மெட்ரோ ரயில், பஸ் ஆகியவற்றில் பயணிக்கும் பயனர்கள் பயண கட்டணத்தை செலுத்த ஏதுவாக, தேசிய பொது இயக்க அட்டை கொண்டு வரப்பட்டது. இந்த அட்டை சிங்கார சென்னை என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது... அந்தவகையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதியில் இருந்து இந்த முறை அமலுக்கு வந்துள்ளது.. மெட்ரோ ரயில் பயண பொது அட்டை பயன்பாடு, நடைமுறைக்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில், இதற்கான அப்டேட் தற்போது வெளியாகியது.
அதாவது, கடந்த ஒரு வாரத்தில், அதுவும் சென்னையில் மட்டும் இந்த அட்டையை 900 பேர் பெற்று பயனடைந்து உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.. நாளடைவில் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்றும் ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.. இதனிடையே, சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்காக ரூ.1,134 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது..
மெட்ரோ ரயில்: அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு ரூ.1134 கோடியே 11 லட்சம் மதிப்பில் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி ஆகும். இது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்திற்கான கடைசி உயர்மட்ட வழித்தட ஒப்பந்தமும் ஆகும்..

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், உயர்மட்ட வழித்தடம் (தோராயமாக 10 கிமீ நீளம்) அமைத்தல் மற்றும் 9 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதுதான்.. சோழிங்கநல்லூர் ஏரி-, ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் (சோழிங்கநல்லூர் ஏரி-II), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செம்மஞ்சேரி-I), செம்மஞ்சேரி-II, காந்தி நகர், நாவலூர், சிறுசேரி, சிறுசேரி சிப்காட் -1 மற்றும் சிறுசேரி சிப்காட் -2.
ஒப்பந்தம் கையெழுத்து: இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் மற்றும் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் சார்பாக முதுநிலை துணைப் பொது மேலாளர் சௌத்ரி ரஜ்னீஷ் குமார் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் டி. குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), இணை பொது மேலாளர் கே.பிரதீபன், பொது ஆலோசகர்கள் மற்றும் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications