சென்னை மெட்ரோ ரயில் சேவையால் இதுவரை கிடைத்த வருமானம் இவ்வளவா? வெளியான தகவல்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவையால் இதுவரை எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் ஆகிய இரு வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு வழித்தடங்களை மேலும் விரிவுப்படுத்தவும் இப்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, கொரோனா காலக்கட்டத்தில் மெட்ரோ ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் மெட்ரோ நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டது. தற்போது கொரோனா அச்சம் விலகியுள்ளதால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 3 கோடியே 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதன் காரணமாக வருவாயும் உயர்ந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 2019-20-ம் நிதியாண்டில் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு ரூ.119.25 கோடியும், 2020-21-ம் நிதியாண்டில் ரூ.30.08 கோடியும், 2021-22-ம் நிதியாண்டில் ரூ.85.34 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஒட்டுமொத்தமாக ரூ.278.92 கோடி வருவாயை சென்னை மெட்ரோ நிர்வாகம் ஈட்டியுள்ளது.
இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆலோசனை வழங்க பிரத்யேகமாக ஆலோசகர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications