சென்னையில் பயணம் ரொம்பவே ஈசியாக போகுது.. ஜனவரியில் நடக்கும் சூப்பர் சம்பவம்.. ரயில்வே குட்நியூஸ்
சென்னை: சென்னை வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்று பயணிகள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருக்கும் நிலையில், வரும் ஜனவரி மாதம் முதல் இந்த ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு பஸ், கார், பைக்குகளில் சென்றால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியுமா என்பது கேள்விக்குறிதான். அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

சென்னை புறநகர் மின்சார ரயில்
அதிலும் பீக் நேரங்களில் எல்லாம் சென்னையின் பிரதான சாலைகளில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. இதனால், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களே பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை கடற்கரை - தாம்பரம், சென்ட்ரல் - ஆவடி, கடற்கரை - வேளச்சேரி உள்ளிட்ட ரூட்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை பரங்கிமலை வரை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை
சென்னையில் மிக முக்கிய வழித்தடமாக உள்ள வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை பரங்கிமலை வரை நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடந்தது. இதில், 4.5 கிலோமீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் அமைக்கப்பட்டது. முழு வீச்சில் பணிகள் நடந்த நிலையில், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே 500 மீட்டர் பாதையை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
15 ஆண்டுகளுக்கு பின்
ஏனெனில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றால் பணிகள் பாதிக்கப்பட்டது. சுமார் 11 ஆண்டுகள் எந்த பணிகளும் நடக்காமல் அப்படியே தடைபட்டு போனதால் பயணிகள் எப்போதுதான் பரங்கிமலை வரை நீட்டிப்பு பணிகள் முடியும் என்று ஏக்கத்துடன் பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில்தான், 15 ஆண்டுகளுக்கு பின்பு நீதிமன்றத்தில் பிரச்சினைகள் தீர்வு காணப்பட்டதால், கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் தண்டவாளம் பணி மற்றும் மின்மயமாக்கும் பணிகள் முடிவு பெறும் தருவாயில் உள்ளது.
ஜனவரி மாதம் இறுதியில்
இறுதிக்கட்டமாக, பரங்கிமலை பறக்கும் ரயில் நிலையத்தில் தண்டவாள மற்றும் மின்மயமாக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைய உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வரும் டிசம்பர் மாதம் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் பாதையில் சேவை தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்த பின்னர் தேதி உறுதி செய்யப்படும். பரங்கிமலை பறக்கும் ரயில் நிலையத்தில் எஞ்சிய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பயணிகள் எதிர்பார்ப்பு
வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால், பரங்கிமலை ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையமாக மாறும். அதாவது தாம்பரம் போல மாறும். இங்கிருந்து வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு பயணிகள் செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் என்பதால் பயணிகள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications