கலெக்டர் ஆக நினைத்து கம்பி எண்ணும் ஷியாம்! போனைப் போட்ட ரித்திகா.. கொலையான மைதிலி! மிரண்ட முகப்பேர்!
சென்னை: சென்னையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொலை சம்பவம். தனது காதலியுடன் வெளியே சென்றதை கண்டித்ததால் அவரது தாயை காதலியின் கண் முன்னே கொடூரமாக கழுத்தை நெரித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தாய் திட்டியதால் காதலனை வரவழைத்து அவரை கொலை செய்ததாக மகளும் விசாரணை வளையத்தில் உள்ளார்.
காதலுக்காக எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. நேற்று காதலிக்காக கஞ்சா விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இன்றோ காதலிக்காக அவரது தாயையே கொலை செய்திருக்கிறார் ஒரு இளைஞர்.

சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் பகுதியை சேர்ந்தவர் மைதிலி. மத்திய தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் சமீபத்தில் தான் பணி ஓய்வு பெற்றிருக்கிறார். அவருடைய 22 வயது ஆன மகள் ரித்திகா தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மைதிலி தனது மகளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரித்திகா ஷியாம் என்ற இளைஞரை காதலித்துள்ளார். இருவரும் அடிக்கடி வெளியே சென்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பகல் நேரங்கள் முழுவதும் ஊர் சுற்றிவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு தாமதமாக வந்திருக்கிறார் ரித்திகா. இதுகுறித்து மைதிலி விசாரித்த போது ரித்திகாவும் ஷியாமும் காதலித்தது தெரிய வந்தது. இதனால் தாய்க்கும் மகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினமும் சண்டை போட்டுள்ளனர்.
நேற்று முன் வழக்கம் போல் வெளியே சுற்றி விட்டு இரவு தாமதமாக ரித்திகா வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மைதிலி எத்தனை நாட்கள் சொன்னாலும் கேட்க மாட்டாயா? இரவில் லேட்டாக வருவதால் அருகில் உள்ளோர் என்னை தவறாக பேசுகிறார்கள்" என சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமான ரித்திகா தனது காதலனான ஷியாமை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரச் சொல்லி அழுதுள்ளார்.
தொலைபேசியில் பேசியும் சமாளிக்க முடியாததால் முகப்பேரில் உள்ள அடுக்குமாடி வீட்டுக்கு வந்திருக்கிறார் ஷியாம். அப்போது எனது காதலியை எப்படி நீங்கள் திட்டலாம் என மைதிலி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். எனது மகளை நான் திட்டுவேன்! நீ யார் அதைக் கேட்க? என மைதிலி பேச இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாற மைதிலியை கீழே தள்ளிய ஷியாம் தனது காதலியின் கண்முன்னே அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
சற்று நேரத்தில் ஆத்திரத்தின் உச்சியில் கொலை செய்ததை உணர்ந்த ஷியாம் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் மைதிலி கொலை செய்யப்பட்டது குறித்து அருகில் வசித்தோர் சென்னை ஜே.ஜே நகர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மைதிலியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து பதிவு செய்த போலிசார் தலைமறைவாக இருந்த ஷியாமை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தாயின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ரித்திகாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷியாம் ஐஏஎஸ்க்காக பயிற்சி மையத்தில் சேர்ந்ததோடு, அரசு தேர்வுகளுக்கும் தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications