சென்னை நீலாங்கரை வீட்டில் உருட்டுக்கட்டைகளுடன் நின்ற தம்பிகள்! நாதக சீமான் மீது வழக்குப் பதிவு
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற போது தங்களை தாக்க உருட்டுக்கட்டைகளுடன் 150 பேர் நின்றிருந்ததாக பெரியாரிய அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது தமிழகத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சமூகநீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா அல்லது இட ஒதுக்கீட்டிற்கும் ஆனைமுத்துவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா, போராடி பெற்றுக் கொடுத்தது ஆனைமுத்தா, பெரியாரா என சீமான் கேட்டிருந்தது பெரியார் அமைப்புகளை கோபத்துக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கு பெரியாரிய அமைப்புகள் அறிவித்திருந்தன. அதன்படி சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
சீமானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், திமுக எம்பி கனிமொழி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், திக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பெரியாரிய கூட்டமைப்புகள் முற்றுகையிட சென்றன.
அப்போது சீமான் வீடு முன்பு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சீமானின் வீட்டை முற்றுகையிட வந்த பெரியாரிய இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
சீமான் வீடு முன்பு போலீஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கட்சியினர் தொண்டர்கள் 150 பேர் கையில் உருட்டுக் கட்டைகளுடன் தயாராக இருந்தனர். அது போல் சீமான் மனைவி கயல்விழியும் மகளிரணியினருடன் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார்.
இது பக்கம் இருக்க நாம் தமிழர் கட்சியினருக்காக சுடச்சுட பிரியாணி தயார் செய்யப்பட்டிருந்தன. ஒரு சில நாதக நிர்வாகிகள் வந்தா வெட்டுவோம் என்றும் கூறியிருந்தனர்.
நீலாங்கரை வீட்டில் தங்களை தாக்கும் நோக்கில்தான் நிர்வாகிகள் உருட்டுக்கட்டைகளுடன் இருந்தனர் என பெரியாரிய அமைப்புகள் புகார் கூறியிருந்தன. மேலும் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே ஆதரவாளர்களை சீமான் அழைத்து வந்துள்ளார் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதன் பேரில் சீமான் உள்ளிட்ட 181 பேர் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications