சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் திடீர் போராட்டம்.. பரபரப்பு நிலவுவதால் போலீசார் குவிப்பு!
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீரென கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டத்தை அடுத்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் காலை 10 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்க அனுமதி மறுப்பதாகவும், கழிவறைக்கு செல்லும் மாணவர்களை மிரட்டி கல்லூரி நிர்வாகம் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பச்சையப்பன் கல்லூரி முழுவதும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், அனைத்து பிளாக்குகளிலும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும், சேதமடைந்த கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும், விடுதியில் பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்த வேண்டும், சத்தான உணவுகளை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில், மாணவர்களின் ஜனநாயகத்தை பறிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் செயல்படுகிறது என நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தின் உள்பகுதியிலும் கல்லூரி வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் போராட்டத்தை உரிமைக்கான போராட்டம் என அறிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் மாணவர்கள். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் காரணமாக வகுப்புகள் தடைபட்டுள்ளன. கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications