சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு திடீர் தடை.. 40 கி.மீ. மேல் வாகனத்தை இயக்கினால் அபராதம்..கமிஷனர் அதிரடி
சென்னை: சென்னையில், இனிமேல் 40 கி.மீ வேகத்தில் வாகனம் இயக்கினால் வழக்கு பதியப்படும் என்று புதிய உத்தரவு, வாகன ஓட்டிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம்?
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நிகழாத வகையிலும், அவைகளை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற செயல்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குற்றவாளிகளும் கைதாகி உள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் 62,351 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், மேலும் 2,730 இடங்களில் 8,189 சிசிடிவி கேமராக்களை, சென்னை போலீசார் பொருத்தியுள்ளனர்..
சுழலும் கேமரா: காரணம், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை, கண்டுபிடித்து அபராதம் விதிக்க 360 டிகிரியில் சுழலும் அதிநவீன ஏஎன்பிஆர் கேமரா வசதியுடன் கூடிய 2டி ரேடார் அமைப்புள்ள வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை அமல்படுத்தியிருக்கிறது. அந்த ரோந்து வாகனங்களிலும், ஏ.என்.பி.ஆர் கேமராக்கள், 2d ரேடார் பொருத்தப்பட்டுள்ளது..
அதாவது, 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ட்ரிபில் ரைட், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குவது மற்றும் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது, உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் அப்பட்டமாக படம்பிடிக்கிறது. இதற்கு நல்ல பலனும் கிடைத்திருப்பதாக போலீஸார் சொல்கிறார்கள். கடந்த 31-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 3,948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிரடிகள்: இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு அதிரடியை சென்னை போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.. சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்..
வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதனையடுத்து விபத்துகளை குறைக்க மணிக்கு 40 கி.மீ வேகம் என்ற கட்டுப்பாடு அவசியம் என்றும் அறிவித்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல, மணிக்கு 40 கி.மீ வேகம் என்ற கட்டுப்பாடு சென்னையில் 10 இடங்களில் அமல்படுத்தப்படும் என்றும் கமிஷனர் உறுதி தந்துள்ளார்.
ஸ்பீடு எச்சரிக்கை: சென்னை - பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை கடந்து சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்து வாகனங்கள் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்பீடு ரேடார் கன் தொழில் நுட்ப கருவி பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு வருவதால் தானியங்கி முறையில் வழக்கு பதிவு என்றும் தெரிவித்துள்ளார்.
வார்னிங்: அரசிடம் அனுமதிப் பெற்று குறிப்பிட்ட நாட்களுக்கு அபராதம் இல்லாமல் இந்த விதிமுறை விரைவில்அமல்படுத்தப்படும் என்றும் கமிஷனர் சங்கர் ஜிவால் கூடுதலாக தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு மன்பு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.. அது கடந்த 2021ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கையாகும்.. அந்த அறிக்கையில், சென்னை பெருநகரம்தான் முதலிடத்தை பிடித்திருந்தது.. அதிவேகமாக வாகனத்தை இயக்குவதிலும் சென்னைதான் முதலிடம் என்ற வேதனை தகவலை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
சபாஷ் நடவடிக்கை: இதற்கு பிறகு, தமிழக அரசு எடுத்த பல்வேறு துரித மற்றும் கண்டிப்பு நடவடிக்கைகளினால், இந்த விபத்துக்கள் குறைய ஆரம்பித்துள்ளன.. இதன் அடுத்தக்கட்ட முன்னெடுப்பைதான், இன்றைய தினம் சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.. இத்தகைய கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும், வாகன ஓட்டிகளின் கவனத்தை பெறுவதுடன், விபத்துக்களும் மேலும் குறையும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications