சென்னை மக்களே பாலம் போட்டும் யூஸ் இல்லை.. பெருங்களத்தூர் மக்கள் எதிர்ப்பால் புது சிக்கல்
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூரில் கடந்த 20 ஆண்டுகளாக சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்த பெருங்களத்தூர் லெவல் கிராசிங் கேட் 32 மூடப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து சீனிவாசா நகரில் இறங்கும் பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ரயில்வே மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட போதும், பெருங்களத்தூர் தண்டவாளத்தைக் கடந்து செல்ல உதவும் ரயில்வே கேட்டும் மூடப்படவில்லை

புதிய ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டதால் பீர்க்கன்கரனை, புதிய பெருங்களத்தூர் பகுதியில் சீனிவாசன் ராகவன் நகரை நோக்கி போக்குவரத்து எந்த தங்கு தடையும் இன்றி சென்று வருகிறது. இதன் மூலம் சீனிவாச நகரிலிருந்து வரும் வாகனங்கள் நேராக ரயில்வே மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலையை அடைந்து தாம்பரம் சென்று வருகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பரில் வண்டலூரில் இருந்து தாம்பரத்திற்கு ஒருவழியாக வாகனங்கள் செல்ல உதவும் இரண்டு மேம்பாலங்கள் திறக்கப்பட்டன, அதே நேரத்தில் எதிர் திசையில் மேம்பாலங்கள் கட்டுமானம் நடந்து வருகிறது. இந்த பாலம் திறக்கப்பட்டால் பெருங்களத்தூரில் வெகுவாக போக்குவரத்து நெரிசல்குறையும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில் ரயில்வே கேட்டை மூட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஆனால் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள லெவல் கிராசிங் கேட்டை மூட அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தில் நடைமேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்காமல், கேட்டை மூடும் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக ரயில்வே கேட் மூடப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீக் ஹவர்ஸில் கிராசிங் மூடப்படுவதால், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமான விஷயமாகவே தொடர்கிறது.
ஸ்ரீனிவாசன் நகர் முதல் ஜிஎஸ்டி சாலை வரையிலான மேம்பாலத்தின் மூன்றாவது புறம் ஜூன் மாதம் திறக்கப்பட்ட உடன், மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து போலீஸார் ரயில்வே கேட்டை மூட முன்வந்தனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெருங்களத்தூர் மக்கள், பாதசாரிகள் பாதையை கடக்க முடியாத நிலை என்று ஏற்படும் என தெரிவித்தனர். மேலும் சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலம் அமைக்காமல் ரயில்வே கேட்டை எந்த காரணம் கொண்டும் மூடக்கூடாது என்றும் பெருங்களத்தூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் ரயில்வே கேட்டில் இருந்த ஒரு புறத்தில்இருந்து இன்னாரு புறத்தை நடந்து சென்று கடக்க ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டும். இது தேவையற்ற அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்றும், எனவே சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலத்தை அமைத்துவிட்டு ரயில்வே கேட்டை மூடினால் எதிர்க்க மாட்டோம் என்று பெருங்களத்தூர் மக்கள் அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை கூறுகையில், சீனிவாசன் ராகவன் சாலை, சுரங்கப்பாதையை அமைப்பதற்கு சாத்தியம் குறைவாக உள்ள பகுதியாக உள்ளது. எனினும் சிறிய சுரங்கப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகயை பார்ப்போம் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications