சென்னையில் 15 வயது சிறுமிக்கு கருகலைப்பு.. காதலன் உட்பட குடும்பத்தினர் 5 மீது போக்சோ
சென்னை: சென்னையில் 15 வயது சிறுமிக்கு கருகலைப்பு செய்த விவகாரத்தில் சிறுமியின் காதலன், மருத்துவர் உட்பட 5 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 பேரையும் சென்னை பெரவளுர் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 4 பேரை சிறையிலும் அடைத்திருக்கின்றனர்.

சென்னை திரு.வி.க நகர் பகுதியில் 15 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் அருகில் இருக்கும் பேன்ஸி ஸ்டோரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். பெற்றோரும் சிறுமியை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்திருக்கின்றனர். கடையில் வேலை செய்து வந்த சிறுமிக்கும், அதே பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியை காதலிப்பதாக கூறிய சிறுவன், அடிக்கடி சிறுமியை தனது வீட்டிற்கும் அழைத்து சென்றிருக்கிறார்.
திருமணம் செய்துக்கொள்வதாகவும், வாழ்க்கையில் இருவரும் சந்தோஷமாக இருப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இந்த சமயத்தில் சிறுமி கர்ப்பம் தரித்திருக்கிறார். அடிக்கடி வயிற்று வலி என்று சொன்னதையடுத்து இந்த விவகாரம் வெளியில் தெரிந்திருக்கிறது. இதனையடுத்து சிறுவனின் தாயார் குடும்பத்துடன் சேர்ந்து கருக்கலைப்புக்கு திட்டமிட்டிருக்கிறார்.
மார்ச் 7ம் தேதி சிறுவனின் தாய் மற்றும் குடும்பத்தினர் 3 பேர் சேர்ந்து தனியார் கிளினுக்குக்கு சிறுமியை அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு வைத்து சிறுமியின் கருவை கலைத்திருக்கின்றனர். இந்த சம்பவத்தையடுத்து சிறுமி அழுதுக்கொண்டே இருந்திருக்கிறார். சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்திருக்கின்றனர். விசாரணையில் உண்மை தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து பெற்றோர் போலீசில் புகார் கொடுத்திருக்கின்றனர். புகாரையடுத்த விசாரணையில் இறங்கிய போலீஸ் 5 பேர் மீது போக்சோ வழக்கை பதிவு செய்திருக்கிறது.
பெரவளுர் போலீசார் கூறுகையில், "15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியது மற்றும் கருவை கலைத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் 17 வயது சிறுவன், அவரது தாய், தந்தை மற்றும் அவரது உறவினர் என 3 பேரையும், கரு கலைப்பு செய்த மருத்துவரையும் கைது செய்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட நபர்களை நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தி பின்னர் சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 4 பேரையும் சிறையிலும் அடைத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications