நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 10 ரூபாய் நோட்டை டோக்கன் போட்ட அதிமுக.. தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடாவைத் தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளைய தினம் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தேர்தல் களம்
இந்த முறை தமிழகத்தில் பல முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரைக் கடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் இருந்த அதே கூட்டணி தொடர்கிறது. அதேநேரம் மற்ற கட்சிகள் தனித்தே தேர்தலில் களமிறங்குகின்றன. கடந்த சட்டசபைத் தேர்தலில் ஒரே அணியாக இருந்து எதிர்கொண்ட அதிமுக, பாமக பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாகக் களமிறங்குகின்றன. இது தவிர தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன.

டோக்கன்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், கடந்த சில நாட்களாகவே அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்தச் சூழலில், சென்னை மாநகராட்சி மண்டலம் 15க்கு உட்பட்ட 195வது வார்டு கண்ணகி நகர் எழில்நகர் பகுதியில், பெண்கள் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் இதற்காக 10 ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுப்பதாகவும் திமுகவினர் கண்ணகி நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

4 போர் கைது
இது தொடர்பான தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீசார், 95வது வார்டு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புத்தம் புதிய 10 ரூபாய் நோட்டுகளை வீடு வீடாக வாக்காளர்களுக்கு டோக்கனாக வழங்குவதை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். பின்னர் பணம் பட்டுவாடா செய்ய டோக்கன் கொடுத்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணை
அவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, 195வது வார்டில் அதிமுக சார்பில் போட்டிடும் OMR.ரவிக்கு ஆதரவாக வாக்களிக்க 10 ரூபாய் நோட்டுகளை டோக்கனாக வழங்கியதாகவும் ரவி வெற்றி பெற்றால் கொடுக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுக்கு 10,000 வழங்குவதாக கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications