விஜயகாந்த்திற்கு விடை கொடுக்க திரண்ட கூட்டம்! "சென்னையில் இந்த பக்கம் போக வேண்டாம்!" பரபர அறிவிப்பு
சென்னை: கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் காரணமாகச் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சென்னை போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விஜயகாந்த் என்ற மாபெரும் கலைஞன் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்த விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது மறைவு பொதுமக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலை வைத்துக் கொண்ட விஜயகாந்த், தமிழ்நாடு முழுக்க பல கோடி ரசிகர்களைக் கொண்டிருந்தார். 1980களில் ஆரம்பித்த அவரது திரை பயணம் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாகும்.
அவமானங்கள்: விஜயகாந்த் செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், அவருக்கு உடனடியாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. இதற்காகப் பல அவமானங்களைக் கடந்தவர். அத்தனையும் தாண்டி அவருக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ,சந்திரசேகர் மூலம் முதல் ஹிட் திரைப்படம் கிடைத்தது. அவர்கள் இணைந்த முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை மிகப் பெரிய ஹிட் அடித்தது.
தொடர்ச்சியாக இருவரும் பல ஹிட் படங்களை கொடுத்தனர். ஆக்ஷன் படங்களில் அதிரடி காட்டிய விஜயகாந்த் தமிழ்நாடு முழுக்க ரசிகர்களை வைத்திருந்தார். அவரது ஒவ்வொரு படத்திலும் அவரது சண்டைக் காட்சிகளுக்கே தனி ரசிகர் பட்டாளம் இருந்தனர். சண்டைக் காட்சிகளுக்கு நிகராக அவரது புள்ளி விவர வசனங்களுக்குமே ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக ரமணா படத்தில் அவர் பேசிய புள்ளி விவர காட்சிகள் இப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும்.
அரசியல் வெற்றி: மக்கள் நலனின் அன்பு கொண்ட அவர், தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிப் பல நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தார். கட்சி ஆரம்பிக்கும் முன்பே அவரது ரசிகர்கள் பலரும் சுயேச்சையாகப் போட்டியிட்டு உள்கட்சி தேர்தல்களிலும் வென்றுள்ளனர். கருணாநிதி, ஜெயலலிதா இரு பெரும் ஆளுமைகள் இருந்த போதே அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். 2011இல் எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனார்.
சமீப காலமாக அவரது உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக் குறைத்துக் கொண்டார். இதற்கிடையே அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அட்மிட் ஆன நிலையில், அவர் நிமோனியா பாதிப்பால் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
போக்குவரத்து நெரிசல்: அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இப்போது தீவுத்திடலில் இருந்து அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, அவரது உடல் இருக்கும் வாகனத்தைச் சுற்றி இரு புறமும் மக்கள் திரண்டு உள்ளனர். இதனால் சென்னையில் பல இடங்களில் டிராபிக் நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்: ஈவேரா சாலை வழியாக அவரது உடல் எடுத்துச் செல்லப்படும் நிலையில், அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பொதுமக்கள் ஈவேரா சாலையைத் தவிர்க்குமாறு சென்னை போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தங்கள் எக்ஸ் பக்கத்தில், "ஊர்வலம் முடியும் வரை பொதுமக்கள் ஈவிஆர் சாலையைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Public are requested to avoid EVR Salai till the procession is over" என்று பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications