அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரம்.. ஆன்லைன் எஃப்ஐஆரை திடீரென முடக்கிய சென்னை போலீஸ்! என்ன நடந்தது!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் புகார் அளித்த மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகச் சென்னை போலீசார் மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வன்கொடுமை செய்துள்ளார்.

மாணவி வன்கொடுமை:
அதாவது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியைப் போட்டோ & வீடியோ எடுத்து, அதைப் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு அனுப்புவேன் எனச் சொல்லி மிரட்டியுள்ளார். மேலும், மாணவியின் செல்போனில் இருந்து தந்தை நம்பரையும் எடுத்து மிரட்டி, என மிரட்டி, அந்த பெண்ணை வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அந்த மாணவி கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரைக் கைது செய்தனர். அப்பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி விற்று வரும் ஞானசேகரன் இதுபோல செய்வதை வாடிக்கையாக வைத்து இருந்ததாகவும் அவர் மீது ஏற்கனவே இதுபோல பல புகார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஞானசேரகன்:
குறிப்பாக இதற்கு முன்பே 2011ல் அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உட்பட பல புகார்கள் அவர் மீது இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற ஞானசேகரனின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் திடீரென மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் விவரங்கள் இணையத்தில் வெளியானது.
மாணவியின் எஃப்ஐஆர் விவரங்கள்
அதாவது எஃப்.ஐ.ஆர் விவகாரங்களை போலீசார் ஆன்லைனில் பதிவேற்றம் செய்த நிலையில், அந்த தகவல்கள் வெளியானது. அதில் மாணவியின் பெயர், முகவரி, எந்த துறையைச் சேர்ந்தவர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருந்தது. மேலும், அந்த மாணவி எந்த நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார்.. அவர் எந்த துறையைச் சேர்ந்தவர் என அனைத்து தகவல்களும் வெளியானது.
நமது நாட்டில் உள்ள சட்டப்படி பாலியல் விவரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கையும் கூட எடுக்கப்படும். அப்படியிருக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் இணையத்தில் வெளியானது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை எஃப்.ஐ.ஆர் விவரங்கள் லீக் ஆனது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
எஃப்ஐஆர் முடக்கம்
இதற்கிடையே ஆன்லைன் எஃப்.ஐ.ஆரில் பெண்ணின் விவரம் உள்ளிட்டவை யாரும் பார்க்க முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை யாரும் பார்க்க முடியாதபடியும் எஃப்.ஐ.ஆர் விவரங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியாதபடியும் முடக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் எஃப்.ஐ.ஆர் விவரங்களைப் பொதுமக்கள் பார்க்க முடியாதவாறும் போலீசார் மட்டும் பார்க்கக்கூடிய வகையிலும் முடக்கி சென்னை போலீசார் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications