டேய்... என்னங்கடா இது... டாஸ்மாக் பெயரில் போலி வெப்சைட்...டோர் டெலிவரியாம்... ஏமாந்த குடிமகன்கள்
சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தின் பெயரில் ஆன்லைனில் போலியாக வெப்சைட் தொடங்கி குடிமகன்களிடம் பணம் வசூலித்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.
Recommended Video
கொரோனா லாக்டவுனால் நாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டன. லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து மதுபான கடைகள் திறக்கப்பட்டன. அத்துடன் தற்போது ஆன்லைனில் மதுபான விற்பனை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப்பில் டோர் டெலிவரி
பஞ்சாப் மாநில அரசு ஆன்லைன் மதுபான விற்பனையை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆன்லைனில் சரக்கு ஆர்டர் செய்தால் ஹோட்டல் உணவுகள் வீடுகளுக்கு வருவது போல சரக்குகளும் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபான விற்பனையை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்து வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் கடை திறப்பு
ஆனால் தமிழகத்தில் உரிய விதிகளின்படி டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்காததால் லாக்டவுன் முடியும் வரை அந்த கடைகள் மூடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தமிழக அரசு தட்டியது. தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க தடை இல்லை என அறிவித்துவிட்டது உச்சநீதிமன்றம்.

ஆன்லைனில் டாஸ்மாக் சரக்கு விற்பனை
இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனத்தின் பெயரில் ஒரு கும்பல் ஆன்லைனில் டோர் டெலிவரிக்காக வெப்சைட் தொடங்கியது. அதில் சரக்குகளுக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டது. அத்துடன் வீடு தேடி சைடிஷ் கொண்டு வருவோம் என கூறி அதற்கும் தனியே கட்டணம் வசூலித்தது. பிறகு என்ன நம்ம குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளில் குவிவதைப் போல படுஜோராக குவிந்தனர்.

சரக்கும் வரலை சைடிஷூம் இல்லை
கையில் எவ்வளவு காசு இருக்கிறதோ அவ்வளவுக்கும் சரக்குகளை ஆர்டர் செய்ய பணத்தை கட்டிவிட்டனர். சரக்கு, சைடிஷ் வரும்...வரும் என தேவுடு காத்துதான் மிச்சம். பல மணிநேரங்களாகியும் வெறும் காத்துதான் வந்தது.. ஆம் எதுவுமே வரவில்லை.. யாரையும் தொடர்பும் கொள்ள முடியவில்லை. இதன்பின்னர்தான் ஆஹா தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதையே குடிமகன்கள் உணர்ந்தனர்.

போலி வெப்சைட் முடக்கம்
குடிக்காமலேயே போதை ஏறியவர்களாய் போலீசில் ஓடி ஓடி புகார் செய்திருக்கின்றனர். இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார் டாஸ்மாக் பெயரில் இயங்கியது போலி வெப்சைட்டை என கண்டுபிடித்து அதை முடக்கினர். மேலும் இதுபோன்ற வெப்சைட்டுகளை நம்பி பணம் கட்டி தொலையாதீர்கள் என அட்வைஸ் செய்த கையோடு அந்த போலி டாஸ்மாக் வெப்சைட் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications