ரவுடிகளுக்கு பாடம் பேச்சு.. மனித உரிமை ஆணையத்தில் வருத்தம் தெரிவித்த சென்னை போலீஸ் கமிஷனர் அருண்
சென்னை: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறிய விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் வருத்தம் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது இந்த கொலை குறித்து முன்கூட்டியே உளவுத் துறை சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் , அவர்களும் ஆம்ஸ்ட்ராங்கை உஷாராக இருக்க அறிவுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இந்த கொடூர கொலை எப்படி நடந்தது என்பது குறித்து சென்னை மாநகர ஆணையராக இருந்த சந்தீப் ரத்தோர், பேட்டி அளித்த போது ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என உளவுத் துறை 3 முறை எச்சரித்த நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து என்ற தகவல் ஏதும் வரவில்லை என ரத்தோர் கூறியதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உளவுத் துறை மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அது போல் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் தன்னை பொருத்தமட்டில் அந்த சட்டங்களை வரவேற்கிறேன் என ரத்தோர் கூறியிருந்தது காவல் துறை மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்திற்கு நேரில் ஆய்வு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த நிலையில் அவர் அதிரடியாக இடம் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் கடந்த ஜூலை 8-ஆம் தேதி பொறுப்பேற்றார். அவர் அளித்த பேட்டியில் முதலில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்போம். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருந்தார். அது போல் காக்கா தோப்பு பாலாஜி, சீசங் ராஜா ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது போல் சென்னை திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற உதவி ஆணையர் இளங்கோவன், அந்த ரவுடியின் மனைவியிடம், உங்கள் கணவர் கத்தியை எடுத்தால் என்கவுன்ட்டர்தான் என எச்சரித்தாராம்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் குறித்து மாநில மனித உரிமை கமிஷன் தானாக முன் வந்து, உதவி கமிஷனர் இளங்கோவன், அவருடன் சென்ற போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 14 ஆம் தேதி கமிஷனர் அருண் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
அப்போது அருண் சார்பில் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜரானார். நேற்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அருண் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினார். அருணின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications