நாங்கள் சுதந்திரமாக தான் பணியாற்றுகிறோம்.. சட்ட ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது! சங்கர் ஜிவால் விளக்கம்
சென்னை: மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வரும் நிலையில், இது குறித்து சென்னை போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சாடி வருகின்றனர்.
அதேபோல கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட, "முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறி இருந்தார். அன்றைய தினமே சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் தொடர்பான செய்தி ஊடகத்தில் வெளியாகி இருந்தன. அதோடு போலீசாரின் ஒத்துழைப்போடு தான் குற்றவாளிகள் தலைமறைவு ஆவதாக மதுரை உயர் நீதிமன்றமே கருத்து கூறி உள்ளது. அந்த அளவுக்குத் தான் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு இருந்து வருகிறது. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இத்துடன் வழிப்பறி, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ஏராளமான கொலைகள், திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளது" என்று கடுமையாகச் சாடியிருந்தார்.

முதல்வர் ஆலோசனை
இந்தச் சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு மற்றும் சென்னை பெருநகர ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சென்னை போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவால் சட்ட ஒழுங்கு நிலை குறித்து விளக்கினார்.

சங்கர் ஜிவால்
செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், "கடந்த மே முதல் ஓராண்டில் 79 பேர் மீது குண்டாஸ் வழக்குப் போடப்பட்டுள்ளது. நில அபகரிப்பு, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட புகார்களில் குண்டாஸ் பாய்ந்துள்ளது. பெரும்பாலும் நில அபகரிப்பு வழக்கில் தான் குண்டாஸ் பாய்ந்துள்ளது. சில சமயங்களில் ஓரிரு குற்றம் புரிந்தவர்கள் மீதும் குண்டாஸ் போடப்படுவதாகக் கூறுகிறார். அவர்களால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், ஓரிரு குற்றம் புரிந்தவர்கள் மீதும் குண்டாஸ் பாயும்!

பறிமுதல்
ஓராண்டில் நில அபகரிப்பு வழக்கில் 190 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளோம். மேலும், 157 கோடி மதிப்புள்ள நில பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. 152 சவரன் நகை, வங்கிகளில் 8 கோடி முடக்கப்பட்டுள்ளது. 7 கோடி கைப்பற்றி உள்ளோம். வெவ்வேறு பெயரில் 50 போலி கப்பல் நிறுவனங்கள் தொடங்கி மோசடி செய்த கும்பலைக் கைது செய்துள்ளோம். சென்னை, தூத்துக்குடி, பெங்களூர் பகுதிகளில் மோசடி நடந்துள்ளது. இதில் 3 நிறுவனங்கள் பெயரில் 15 கோடி மோசடி செய்துள்ளனர்.

அரசு வேலை
அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 5 கோடிக்கு மேல் மோசடி செய்த கும்பலைக் கைது செய்துள்ளோம். அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களிடம் ஏமாற வேண்டாம். ஏஐசிடிஇ பெயரில் போலி நேர்முகத் தேர்வு நடத்தி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுதந்திரமாக பணியாற்றுகிறோம்
சென்னை காவல் துறையினர் சுதந்திரமாக பணியாற்றுகின்றனர். ஒரு மாதத்தில் மட்டும் 20 கொலைகள் நடந்ததாகக் கூறப்படுவது முழுக்க முழுக்க பொய்யான தகவல். தலைநகர் சென்னையில் குற்றங்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள. மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பிடுகையில் சென்னையில் சட்ட ஒழுங்கு நிலை சிறப்பாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications