உள்ளதும் போச்சா கோவிந்தா! அதிமுக ஆபீசுக்கு செல்ல ஓபிஎஸ்-க்கு போலீஸ் அனுமதி மறுப்பு?
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் தமக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை சென்னை போலீசார் நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 22-ந் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்புமே பங்கேற்றனர். ஆனால் இருதரப்பினரிடையே முரண்பாடுகள், மோதல்கள் இருந்ததால் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் ஜூலை 11-ந் தேதி புதிய பொதுக்குழு நடைபெறும் என இபிஎஸ் தரப்பு தன்னிச்சையாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக மீண்டும் இரு அணிகளாக அதிகாரப்பூர்வமாக பிரிந்தன.

அதிமுகவின் இபிஎஸ் அணி, சென்னை வானகரத்தில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தியது. அதேநாளில் ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு சென்றார். அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் வன்முறை வெடித்தது. இருதரப்பும் கற்களை வீசி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் பலரது மண்டை உடைந்தது.
இந்த வன்முறைக்கு நடுவே அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது ஓபிஎஸ் கோஷ்டி. பின்னர் அங்கிருந்து ஏராளமான பொருட்களை அள்ளிச் சென்றது. இதனால் அதிமுக அலுவலகம் கொள்ளையடிக்கப்பட்டது போல காட்சி தந்து. இதையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வந்த இபிஎஸ் அணி அதிர்ச்சியடைந்த நிலையில் போலீசில் புகார் கொடுத்தது. அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் அணி கொள்ளையடித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பதற்றத்தை தணிக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதிமுக தலைமை அலுவலகக் கட்டிடமானது மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் சென்றது. இதனால் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் அதிமுக அலுவலக சீலை அகற்றி, சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பு அளித்தார்.
இத்தீர்ப்பின் அடிப்படையில் இபிஎஸ் தரப்பிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 72 நாட்களுக்குப் பின்னர் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்). அவருக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை போலீசில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. தாமும் அதிமுக அலுவலகம் செல்வதால் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கோரிக்கையை சென்னை போலீஸ் நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றிருந்தால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு தர தயார் என்றும் சென்னை போலீசார் கூறியுள்ள்னாராம். இதனால் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications