பால்கனியில் பச்சிளங் குழந்தை! உடனே சுதாரித்த இளைஞர்கள்..திக் திக் வீடியோ!சம்பவம் நடந்தது இங்கே தான்!
சென்னை: சென்னை போரூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பால்கனியில் தவறி விழுந்த குழந்தையை ஒன்றாக கூடி மீட்ட இளைஞர்களின் வீடியோ வெளியாகி பாராட்டுதலை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் ஆவடியில் நடந்தது தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் தலைநகராக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வேலை வாய்ப்பு காரணமாக தங்கி வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

அப்படி ஒரு பரபரப்பு நிறைந்த குடியிருப்பில் தான் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஆவடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வெங்கடேஷ் - ரம்யா தம்பதியினரின் 7 மாத குழந்தையான கிரண்மாயி. இன்று காலை ரம்யா பால்கனி அருகே குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்.
பச்சிளம் குழந்தை: பால்கனி அருகே சென்ற போது தாயின் கையிலிருந்து அந்த குழந்தை திடீரென அடுக்குமாடி பால்கனியிலிருந்து தவறி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தரையில் விழாமல் கூரை ஒன்றின் மேல் விழுந்த குழந்தை அங்கிருந்த புறாக்களை பார்த்துக் கொண்டே தத்தளித்தவாறு நின்று கொண்டிருந்தது.
திரண்ட இளைஞர்கள்: இதை அடுத்து அருகில் வசித்தோர் குழந்தை ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து கூச்சலிட்டனர். இதை அடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழந்தையை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்ட தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக அவர்கள் அங்கிருந்த போர்வைகள் உள்ளிட்டவற்றை வலைபோல விரித்து கீழே விழாமல் பார்த்துக் கொண்டனர்.
குழந்தை மீட்பு: அதே நேரத்தில் அங்கிருந்த சிலர் கீழ் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக சென்று அந்த குழந்தையை மீட்டனர். குழந்தை மீட்கப்பட்டதும் அங்கிருந்த மக்கள் கைதட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்ததும் அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட வீடியோவும் ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பெற்றோரின் கவனக்குறைவே இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் எனவும், பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்போர் நிச்சயம் அவர்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என அறிவுரையும் கூறி வருகின்றனர்.
காவல்துறை விளக்கம்: இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டது போரூர் என்றும் சிலர் திருமுல்லைவாயல் எனவும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே இது குறித்து சென்னை மாநகர காவல் துறையிடம் விசாரித்த போது இதுபோன்று சம்பவம் நடந்ததாக தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை எனவும் தீயணைப்பு துறை அதிகாரிகளிடமும் கேட்டபோது தங்களுக்கு எந்தவிதமான புகார் அல்லது மீட்பு கோரிக்கையும் வரவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
காப்பாற்றியவர் யார்?: அதே நேரத்தில் இந்த சம்பவம் ஆவடியில் நடந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இதனை ஆவடி காவல்துறையினரும் உறுதி செய்துள்ளனர். மேலும் அந்த குழந்தை தற்போது ஆவடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லபடியாக இருப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். கடவுளின் அனுகிரகத்தாலும், அதிர்ஷ்டத்தாலும் குழந்தை காப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தாயாக அந்த வேதனையை தங்களால் உணர முடிந்ததாகவும், ஹரி என்பவர் தான் அந்த குழந்தையை காப்பாற்றியதாக கூறினர்.












Click it and Unblock the Notifications