இனி 'தல' ஆடாது.. ஒட்ட நறுக்க போகும் போலீஸ்.. கல்லூரி மாணவர்களுக்கு செம்ம வார்னிங்!
சென்னை: 8 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் 'ரூட் தல' போன்ற பிரச்சனைகளில் ஈடுபட்டு சட்டததை மீறி நடந்து கொண்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கல்லூரிகளுக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் 'ரூட் தல' என்று சொல்லி பேருந்துகள் மற்றும் ரயில்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்வது வழக்கம்.
பதற்றம்
கடந்தாண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ‘ரூட் தல' பிரச்னை ஏற்பட்டது. அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாநகர பேருந்தை வழிமறித்து பட்டாக்கத்தியால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டதால் அப்போது பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீசாரின் கடும் நடவடிக்கைக்கு பின்னர் ஓய்ந்தது.
அடிக்கடி சண்டை
இதனிடையே ரூட் தல போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க சென்னை காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி இருந்தும் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி, புதுக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே யார் ‘ரூட் தல' என்ற போட்டியில் அடிக்கடி சண்டை நடக்கிறது.
காவல் துறை எச்சரிக்கை
தற்போது 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளதால், ரூட் தல பிரச்னை நடைபெற அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீசார் மாநகர காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
போலீஸ் அதிரடி
இதனால், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 12 காவல் மாவட்டங்களில் உள்ள துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் போலீசார் அனைத்து மாநகர பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் அனைத்து கல்லூரிகள் முன்பும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
போலீசாரின் எச்சரிக்கையை மீறி இறுதி ஆண்டு மாணவர்கள் இன்று ‘ரூட் தல' பிரச்னையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு, கைது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களுக்கு சென்னை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.