போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. இந்நிலையில் தான் சென்னை மெரினாவில் திமுகவுக்கு ஆதரவாகவும், தவெகவிற்கு எதிராகவும் பதாகைகள் ஏந்தி பிரசாரம் செய்த 'பிக்பாஸ்' பிரபலமான நடிகை ஜூலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த விசாரணைக்கு பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் தான் உள்ளது. இந்நிலையில் தான் அனைத்து கட்சி வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிரமாக தேர்தல் பிரசாாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தல் பிரசாரங்களில் நடிகை, நடிகைகள் பலரும் தங்களுக்கு விருப்பம் உள்ள கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 'பிக்பாஸ்' பிரபலமும், நடிகையுமான ஜூலி தொடர்ந்து விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சனம் செய்து வருகிறார். விஜயின் அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலில் போட்டியிடும் நிலையில் ஜூலி அந்த கட்சியினரை தாக்கி பேசி வருகிறார்.
திமுகவுக்கு ஆதரவு பிரசாரம்
இந்நிலையில் தான் நடிகை ஜூலி இன்று சென்னை மெரினாவில் பிரசாரம் மேற்கொண்டார். கருப்பு - சிவப்பு ஆடை அணிந்து அவர் பிரசாரம் செய்தார். திமுகவுக்கு ஆதவாகவும், விஜயின் தவெகவிற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை அவர் கையில் ஏந்தியிருந்தார். ஒரு பதாகையில் Vote For DMK என எழுதி வைத்திருந்தார்.
தவெகவிற்கு எதிராக பிரசாரம்
இன்னொரு பதாகையில் அணில் படம் போடப்பட்டு அதன் மீது X சிம்பள் இருந்ததோடு, அந்த பதாகையில் 'பெண்களுக்கு இவர்களால் பாதுகாப்பு இல்லை'' என்று எழுதி வைத்திருந்தார். இதன்மூலம் மறைமுகமாக அவர் விஜயின் தவெகவிற்கு எதிராக பிரசாரம் செய்திருந்தார். தொடர்ந்து விஜயின் தவெகவினரை சீண்டி வரும் ஜூலியின் இந்த செயல் அந்த கட்சியினரை மீண்டும் கோபப்படுத்தியது.
மெரினா தேர்வு ஏன்?
மேலும் இதுதொடர்பான போட்டோவை அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். அதில் 'எங்கு தொடங்கினோமோ அங்கேயே''என்று கேப்ஷன் கொடுத்து இருந்தார். ஜூலி மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக தான் பிரபலமானார். அதன்பிறகு தான் பிக்பாஸ் வாய்ப்பு மற்றும் சினிமா வாய்ப்புகள் அவரை தேடி சென்றன. இதனால் அவர் தனது தேர்தல் பிரசாரத்துக்கும் மெரினாவை இன்று தேர்வு செய்திருந்தார்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில் தான் ஜூலியை சென்னை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். பொதுவாக பிரசாரம் செய்ய வேண்டும் என்றால் தேர்தல் அதிகாரியிடம் அதற்கான இடம், நேரம் உள்ளிட்டவற்றை வழங்கி அனுமதி பெற வேண்டும். ஆனால் ஜூலி எந்த அனுமதியும் இன்றி பொதுஇடமாக சென்னை மெரினாவில் பிரசாரம் செய்துள்ளார். இதுபற்றி தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஜூலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications