பூசணிக்காயை உடைச்சா விபத்து குறையுமா ஆபீசர்? பாய்ந்த நெட்டிசன்கள்.. சென்னை போலீஸ் அதிரடி ஆக்ஷன்
சென்னை: சாலை விபத்துகளைக் குறைக்கிறேன் எனச் சொல்லி நடுரோட்டில் பூசணியை உடைத்த காவலர் வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், சென்னை டிராபிக் போலீசார் இது குறித்து விளக்கமளித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் டிராபிக் தான் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. பெங்களூர், சென்னை, டெல்லி, மும்பை எனப் பல நகரங்களை நாம் சொல்லலாம்.
நாம் வீட்டை விட்டு வெளியே வந்தால், அதிலும் குறிப்பாக பீக் ஹவர்ஸில் குறைந்தபட்சம் சில மணி நேரம் டிராபிக்கில் நின்றே ஆக வேண்டும் என்ற சூழலே இருக்கிறது.

டிராபிக் அதிகரிப்பு, அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது போன்ற காரணங்களால் பல இடங்களில் விபத்துகளும் கூட அரங்கேறுகிறது. இந்தியாவில் மட்டும் ஓராண்டில் சுமார் 1.5 லட்சம் பேரை நாம் இழக்கிறோம். இந்த இழப்புகளைத் தவிர்க்க வாகன விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
தலைநகர் சென்னையில் மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்து நடந்து வருகிறது. இதனால் அங்கே அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த வாகன விபத்துகளைத் தடுக்க சென்னை பெருநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அங்கே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இங்கே சாலை விபத்துகளைத் தடுக்க எனச் சொல்லி போலீசார் செய்தி காரியம் இப்போது சர்ச்சையாகியுள்ளது. அதாவது விபத்துகள் நடக்கக் கூடாது என்பதற்காக மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனி உடன் சில காவலர்களையும் அழைத்துக் கொண்டு திருநங்கை ஒருவரை போலீஸ் வாகனத்தில் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களுக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.
அங்கே விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காகப் பூசணிக்காய், எலுமிச்சை பழத்தை எல்லாம் வைத்து திருஷ்டி சுற்றியுள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் பரவியது. பலரும் போலீசார் எதற்காக இதுபோன்ற மூட நம்பிக்கையைப் பரப்பும் செயல்களைச் செய்கிறார்கள்.. வாகனங்களை முறையாகக் கண்காணித்துத் தவறு செய்யும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலே விபத்துகள் குறையும் என்று பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.
பலரும் சென்னை டிராபிக் போலீசாரின் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்து இது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து சென்னை போலீசாரே விளக்கமளித்துள்ளனர். அதாவது. "இது ஒரு தனிப்பட்ட அதிகாரி, தனது தனிப்பட்ட நம்பிக்கையின் நீட்சியால் செய்த நல்ல நோக்கம் கொண்ட, ஆனால் முற்றிலும் தவிர்க்கக் கூடிய செயலாகும்.

அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நடத்தையை வேறுபடுத்திப் பார்க்க ஒரு கணம் தவறிவிட்டார். சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை பகுத்தறிவு, அறிவியல் பகுப்பாய்வு, விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் விபத்து தடுப்பு முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வை மட்டுமே நம்புகிறது" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மேலும், இப்படி நடுரோட்டில் பூசணிக்காயை உடைத்த மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனி பணியில் இருந்து விலக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications