சென்னையில் போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபர்.. துரத்தி சென்ற காவலர் கார் மோதி உயிரிழப்பு!
சென்னை: சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்றவரை பிடிக்க இரு சக்கர வாகனத்தில் துரத்தி சென்ற காவலர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாறுமாறாக போதையில் காரை ஓட்டியபடி சென்றவரை பிடிக்க முயன்றபோது அந்த கார் இடித்து தள்ளியதில் காவலர் மேகநாதன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை பள்ளிக்கரணை அருகே எல்.ஐ.சி நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் மேகநாதன் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு சக்கர வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு கார் ஒன்று போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றது.

மேலும் அந்த கார் சாலையில் அங்கும் இங்குமாக சென்றது. கார் ஓட்டுனர் போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் அந்த காரை மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தார். கார் வேகமாக சென்ற நிலையில் 200 அடி சாலையில் காமாச்சி மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென அந்த கார் இவரது மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் மோதியதாக சொல்லப்படுகிறது.
இதில் காரின் முன்பகுதியில் சிக்கி சுமார் 20 அடி தூரத்திற்கு காவலர் மேகநாதன் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கார் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. படுகாயத்துடன் கிடந்த காவலர் மேகநாதனை வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவலர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தாறுமாறாக போதையில் காரை ஓட்டியபடி சென்றவரை பிடிக்க முயன்றபோது காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த காவலர் மேகநாதனுக்கு 7 வயதில் ஒரு மகளும்,ஒன்றரை வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications