மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண்களே.. வருகிறது புதிய மாற்றம்! இனி ‘சென்டர்’ தான்.. பின்னணி காரணம்?
சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக்காக பெண்கள் பெட்டியை நடுப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இளம்பெண் ஒருவரிடம் செல்போன் பறிப்பு சம்பவத்திபோது அவர் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னையில் நாள்தோறும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களிலும் தினசரி 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

எனினும், பெரும்பாலும் ரயில்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பீக் ஹவர்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக நெரிசல் மிகுந்த நேரங்களில் திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. திருட்டு சம்பவங்கள் உயிர் பலியிலும் முடிந்து வருவது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை 2ஆம் தேதி சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பிரீத்தி என்ற இளம்பெண் இந்திரா நகர் ரயில் நிலையத்தில் இறங்கும்போது நடைமேடையில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்கள் பிரீத்தியின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். அப்போது கீழே தள்ளிவிடப்பட்ட ப்ரீத்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்தனர். பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருவது பெண் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றைத் தடுக்க ரயில்வே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்பாடு குறித்து சமீபத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள், ரயில்வே கோட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது மின்சார ரயில்கள் மற்றும் குறுகிய தூரத்திற்கு இயக்கப்படும் ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கான பெட்டிகள் ரயில்களின் நடுப்பகுதியில் ஒரே பெட்டியாக ஒதுக்கீடு செய்தால் பாதுகாப்புப் பணிக்கு வசதியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இப்போது மின்சார ரயில்களில், குறிப்பிட்ட இடைவெளிகளுடன் அமைக்கப்பட்டுள்ள மகளிர் பெட்டிகளை இனி ரயில்களின் நடுப்பகுதியில் தொடர்ச்சியாக இருக்கும் வகையில் அனைத்து ரயில்களிலும் மாற்றம் செய்ய சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்பு பிரிவில் இருந்து ரயில்வே அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications