சென்னை மழை.. 15 மண்டலங்களுக்கு களமிறக்கப்பட்ட 15 ஐஏஎஸ் படை.. பல லட்சம் பேருக்கு உணவு ரெடி- பின்னணி
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் இன்று உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.
சென்னையில் நேற்று முதல்நாள் மாலையில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை கொஞ்சம் பிரேக் எடுத்த மழை மீண்டும் பெய்ய தொடங்கி உள்ளது.
கனமழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல இடங்களில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

கண்காணிப்பு
நேற்று மழை, வெள்ளம் ஏற்பட்டவுடன் முதல்வர் ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு களத்திற்கு சென்றார். மழை நீர் வடியும் வரை காத்திருந்து 2 நாட்கள் கழித்து செல்லாமல் முதல்வர் துரிதமாக செயல்பட்டு மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். வடசென்னையில் 9 இடங்கள் உட்பட மொத்தம் 11 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் முதல்வர் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.

மீட்டிங்
சென்னை மழை மற்றும் புயல் நிலவரம் குறித்து முதல்வர் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து உத்தரவிட்டார். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி அவர்களுக்கு கீழ் ஒரு குழு என்று மழை நிவாரண பணிகளையும், தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி
மண்டலம் 1ல் ஐஏஎஸ் அதிகாரி சரவண்குமார் ஜடாவத்
மண்டலம் 2-பி.கணேசன் ஐஏஎஸ்
மண்டலம் 3-சந்தீப் நந்தூரி ஐஏஎஸ்
மண்டலம்4-டி.ஜி.வினய் ஐஏஎஸ்
மண்டலம் 5-மகேஸ்வரி ரவிகுமார் ஐஏஎஸ்
மண்டலம் 6-பிரதீப்குமார் ஐஏஎஸ்
மண்டலம் 7- எஸ்.சுரேஷ்குமார் ஐஏஎஸ்
மண்டலம் 8-பழனிச்சாமி ஐஏஎஸ்
மண்டலம் 9-கே.ராஜாமணி ஐஏஎஸ்
மண்டலம் 10- எம்.விஜயலட்சுமி ஐஏஎஸ்
மண்டலம் 11- கே.இளம்பகாவத் ஐஏஎஸ்
மண்டலம் 12- எல்.நிர்மல் ராஜ் ஐஏஎஸ்
மண்டலம் 13- எஸ்.மலர்விழி ஐஏஎஸ்
மண்டலம் 14- எஸ்.சரவணன் ஐஏஎஸ்
மண்டலம் 15-வீரராகவராவ் ஐஏஎஸ்
ஆகியோர் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

பணியை தொடங்கினர்
நேற்று மாலையே இவர்கள் அனைவரும் சென்னையில் தங்கள் மழை நிவாரண பணிகளை தொடங்கினார்கள். தண்ணீர் வெளியேற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை முதல் கட்டமாக மேற்கொண்டனர். மோட்டார்களை ஏற்பாடு செய்து பம்புகள் மூலம் நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர். தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளையும் ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

உணவு
இதையடுத்து இன்று முகாம்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு 15 மண்டலங்களிலும் இவர்கள் உணவு தயார் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக 15 மண்டலங்களின் அதிகாரிகளின் மேற்பார்வையில் காலை உணவு மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. 15 மண்டலங்களிலும் இன்று காலை 1.29 லட்சம் உணவு பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மண்டலம்
பாதிக்கப்பட்ட மண்டலம் வாரியாக இவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட இடங்கள் அடிப்படையிலும் இந்த உணவு பொட்டலங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. உணவு தவிர்த்து மாஸ்க், போர்வை போன்ற நிவாரண பொருட்களும் வழங்கப்படுகிறது. சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications