வெள்ளம் சூழ்ந்த மருத்துவமனை.. கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறை
மழை வெள்ளத்தினால் வடசென்னை தத்தளிக்கிறது. புளியந்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றியும் மழை நீர் தேங்கியதால் சிக்கித் தவித்த நோயாளிகளை தீயணைப்புபடையினர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.
சென்னை: புளியந்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றியும் மழை வெள்ளநீர் தேங்கியதால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சிக்கித் தவித்தனர். கைக்குழந்தையுடன் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொண்டு உதவி கேட்கவே, குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்னையும், மூதாட்டி உள்ளிட்ட 5 நோயாளிகளையும் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.
வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழைக்கு சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் தமிழக அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.

பல இடங்களில் மழை நீர் வடியாமல் குளம் போல காட்சியளிக்கிறது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வரும் 10,11ஆம் தேதிகளில் சென்னை, டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னைவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர்.
மழை ஓய்வில்லாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளம் வடியாமல் பல பகுதிகளும் குளம் போல காட்சியளிக்கின்றன. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், திருநீர்மலை, சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென் சென்னையில் வேளச்சேரி பகுதி வெள்ளச்சேரியாக காட்சியளிக்கிறது. சாலைகளில் படகுகள் ஓடத்தொடங்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். வடசென்னை பகுதியிலும் பிரதான சாலைகள் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
புளியந்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றியும் மழை நீர் தேங்கியதால் சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். மேலும் கைக்குழந்தையுடன் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உதவி வேண்டி தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொண்டதையடுத்து, குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்னையும, மூதாட்டி உள்ளிட்ட 5 நோயாளிகளையும் ரப்பர் படகுகள் மூலம் தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.












Click it and Unblock the Notifications