"மொத்தம் 125 கிமீ.."சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்! இனி மழை நீர் தேங்காதா?
சென்னை: பருவமழை சீசன் தொடங்கும் நிலையில், சென்னையில் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 125 கிமீ நீள மழைநீர் வடிகால்களில் தூர் வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனால் மழை நீர் எங்கும் தேங்காமல் எளிதாக வெளியேறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு கோடை வெப்பம் மிக மிக மோசமாகவே இருந்தது. பல இடங்களில் வெப்பம் உச்சம் தொட்டதால் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே ஏற்பட்டது.

பொதுமக்களைப் படுத்தி எடுத்து வந்த கோடை வெப்பம் இப்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. மெல்லப் பருவமழை சீசனும் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
சென்னை மழைநீர் வடிகால்: மழை சீசன் தொடங்கினாலே எங்குச் சாலைகளில் மழை நீர் தேங்குமோ.. வீடுகளில் மழை நீர் புகுந்துவிடுமோ என்ற அச்சம் சென்னைவாசிகளுக்கு வந்துவிடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகச் சென்னையில் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது என்றே சொல்லலாம். கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலைத் தவிர்த்துப் பார்த்தால் மழைக் காலங்களில் பெரியளவில் நீர் தேங்குவது இல்லை.
புதிய மழைநீர் வடிகால்களை அமைப்பது, ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களைச் சீர் செய்வது எனச் சென்னை மாநகராட்சி எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும்.. அதன்படி இந்தாண்டும் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 125 கிமீ நீள மழைநீர் வடிகால்களில் தூர் வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும், அங்குள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணிகளும் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய பங்கு: சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2,624 கிமீ நீள மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கால்வாய்கள் கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா மற்றும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மழை பெய்யும் போது நகரில் மழை நீர் தேங்காமல் அவற்றை வடிய வைக்க இந்த மழைநீர் வடிகால்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தாண்டு பருவமழை தொடங்கும் நிலையில், கடந்த மே 23 முதல் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மேலும் கூறுகையில், "மாநகராட்சி சார்பில் 2,624 கிமீ தூர மழைநீர் வடிகால்களைப் பராமரித்து வருகிறோம். கடந்த ஆண்டு இதில் 1,731 கிமீ நீள வடிகால்கள் தூர்வாரப்பட்டன.. இதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் இடையூறு இல்லாமல் வடிந்தது.
விரிவான ஆய்வு: சில பகுதிகளில் நீர் வெளியேறாமல் தேங்கியது. அந்த இடங்கள் குறித்தும் உடனடியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தாண்டு பருவமழை தொடங்கும் நிலையில், நகரில் உள்ள மழைநீர் வடிகால்கள் குறித்து ஆய்வு செய்தோம். அதில் 724 கிமீ நீள மழைநீர் வடிகால்கள் நல்ல நிலையில் இருப்பது தெரிய வந்தது. அதேநேரம் 1,900 கி.மீ நீள வடிகால்களைத் தூர்வார வேண்டி இருப்பதும் தெரியவந்தது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக தூர் வாரும் பணிகளை முடிக்கத் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தோம். இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 845 கிமீ நீளத்துக்குத் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. இதில் தற்போது வரை 125 கிமீ நீளத்துக்குத் தூர் வாரப்பட்டுள்ளது.
நடவடிக்கை: அதேபோல மழைநீர் வடிகால்களை ஒட்டி அமைந்துள்ள வடிகட்டி தொட்டிகளையும் தூர்வார நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் பகுதிகளில் அனைத்திலும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 2 பெரிய ஆம்பிபியன், சிறிய ஆம்பிபியன் இயந்திரங்கள், 4 ரோபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.. அக்டோபர் மாதத்திற்குள் இதை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications