சென்னையை அதிரவைத்த பெருமழை- 45 நிமிடத்தில் 6 செ.மீ, 1 மணிநேரத்தில் 7 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது!
சென்னை: சென்னை மாநகரில் இன்று அதிகாலையில் 45 நிமிடங்களில் 6 செ.மீ அளவுக்கும் 1 மணிநேரத்தில் 7 செ.மீ. அளவுக்கும் மழை கொட்டி தீர்த்ததாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பாலச்சந்திரன் கூறியதாவது; வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டி நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது, மேலும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகியுள்ளது, அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கன மழையை பொறுத்தமட்டில் மூன்று இடங்களில் அதி கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 26 இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது.

2 நாட்களுக்கு வார்னிங்
அடுத்த இரு தினங்களை பொருத்தவரையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு கடலூர், விழுப்புரம், புதுவை காரைக்காலில் கன முதல் மிக கனமழையும் சில நேரங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் இன்றும் நாளையும் தென்மேற்கு வங்க கடல், தமிழகக் கடற்கரை தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். வரும் 9-ந் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று வட தமிழக கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக வரும் 10 மற்றும் 11-ந் தேதிகளில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை இருக்கும். ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

சென்னைக்கு அதிகனமழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழையும் சில சமயங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை பதிவான மழை அளவு 33 செ.மீ. வடகிழக்கு பருமவழையின் இயல்பு அளவு 23 செ.மீ. தற்போது இயல்பான மழை அளவை விட 43% அதிகம் பெய்துள்ளது.

சென்னையில் அதிரடி காட்டிய பெருமழை
சென்னையில் நேற்று காலை அறிவிப்பில் கனமழை எதிர்பார்க்கப்படாமல் இருந்தது. சென்னையில் நேற்று இரவு 10 மணி வரை 3 செ.மீ. மழை பதிவானது. ஆனால் அதிகாலையில் 1 மணி முதல் 1.45 மணி வரை மொத்தம் 6 செ.மீ மழை அதாவது 45 நிமிடங்களில் 6 செ.மீ. மழை கொட்டியது. அதேபோல் காலையில் 5 மணி முதல் 6 மணி வரை 1 மணிநேரத்தில் 7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. வளிமண்டல மாற்றங்களினால் இப்படி கனமழை கொட்டியது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.












Click it and Unblock the Notifications