சென்னையை புரட்டிப்போட்ட மழை.. 1990க்கு பிறகு ஒரேநாளில் அதிகம்.. மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை
சென்னை: சென்னையில் பல இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 30 ஆண்டுகள் இல்லாத வகையிலும், கடந்த 72 ஆண்டுகளில் 3வது அதிகபட்ச அளவாகவும் இன்று மழை பதிவாகி உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார். மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் பரவலான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் பல இடங்களில் மழை நீடித்தது.
தமிழக மீனவர் படகை துளைத்த 47 குண்டுகள்..இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு..கடற்படை அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் கனமழை
சென்னை எழும்பூர், வேப்பேரி, பெரிமேடு, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தியாகராய நகர், ஜி.என் செட்டி சாலை, மாம்பலம், கொளத்தூர், பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டை கிண்டி, திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. மேலும் சென்னையின் பிற இடங்கள், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
பாலச்சந்திரன் பேட்டி
கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 10 செ.மீ, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை பகுதியில் 9.8 செ.மீ, அயனாவரத்தில் 9.4 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ, டிஜிபி அலுவலக பகுதியில் 7.2 செ.மீ, எம்ஜிஆர் நகர் பகுதியில் 6.6 செ.மீ மழை பதிவாகி இருந்தது. இதுபற்றி தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அடுத்த 3 நாள் மிதமான மழை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்கள் தமிழகம், புதுவை, காரைக்காலில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் கனமழை
அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, காங்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
72 ஆண்டு வரலாற்றில் 3வது அதிகபட்சம்
மேலும் நவம்பர் 1ம் தேதி பதிவான மழையை பொறுத்தவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 72 ஆண்டுகளில் பெய்த மழையில் இது 3வது அதிகபட்ச அளவாகும். கடந்த 30 ஆண்டுகளை பொறுத்து கணக்கீட்டால் இது இது முதலாவது அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்பு 1990 நவம்பர் ஒன்றாம் தேதி 13 செமீட்டரும், 1964 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி 11 செமீட்டரும் பதிவாகி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த ஒன்றாம் தேதி(அக்டோபர்) முதல் இன்று வரை 20 செமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் இயல்பு அளவு என்பது 28 செமீ. இது 29 சதவீதம் வரை குறைவாகும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடற்கரை பகுதிகள், மன்னார்வளைகுடா பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் அடுத்த 2 நாட்கள் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இருநாட்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்றார்.