மீண்டு வரும் சென்னை.. கதிகலங்க வைக்கும் கோவை.. இரண்டு வாரத்தில் நடந்த 2 மாற்றங்கள்!
சென்னை : சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வரும் அதே வேளையில், கோவையில் தொடார்ந்து அப்படியே உயர்ந்து வருகிறது. இப்படியே போனால் கோவை விரைவில் சென்னையை முந்தும் அபாயமும் உள்ளது. முதல்முறையாக சென்னையைவிட அதிக பாதிப்பு உள்ள ஒரு தமிழக மாவட்டமாக கோவை உருவெடுக்கும் நிலையும் ஏற்படலாம். 2 வாரத்தில் கோவையில் கொரோனா அதிகரித்தும், சென்னையில் குறைந்தும் காணப்படுகிறது
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 34,285 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் சிகிச்சை பெற்ற 28,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் நாள் தோறும் 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தினம் தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பரிசோதனை எண்ணிக்கை நேற்று 1 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

20 சதவீதம் பாதிப்பு
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட கணக்கின்படி, தமிழகத்தில் நேற்று 1,71,866 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 34,285 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 சதவீதம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி சோதனையில் 20 சதவீதம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

கொரோனா பலி
இதுவரையில், தமிழகத்தில் 19,11,496 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 3 லட்சத்து, 6 ஆயிரத்து 642 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், நேற்று 28 ஆயிரத்து 745 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,83,504 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 468 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அந்தவகையில், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,340 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சென்னையில் நேற்று கொரோனாவால் 4 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டனர். சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் 3,632 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் நேற்று 88 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

2 வாரத்தில் மாற்றங்கள்
இந்தநிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.. கடந்த 12ம் தேதி 7 ஆயிரத்திற்கும் மேல் இருந்த பாதிப்பானது தற்போது 4 ஆயிரத்து 41 ஆக குறைந்துள்ளது. கடந்த12ம் தேதி 7,564 பேருக்கும், 13ம் தேதி 6,991 பேருக்கும், 14ம் தேதி 6,538 பேருக்கும், 15ம் தேதி 6640 பேருக்கும், 17ம் தேதி 6150 பேருக்கும், 18ம் தேதி 6,016 பேருக்கும் உறுதி செய்யப்பட்டது. இப்படி படிப்படியாக குறைந்த கொரோனா 21ம் தேதி 6 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது. 24ம் தேதி 5 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது. அடுத்த ஒரே நாளில் அதாவது 25ம் தேதி 4 ஆயிரம் என்கிற அளவிற்கு சரிந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்று 4 ஆயிரத்திற்கு கீழ் கூட இன்று செல்ல வாய்ப்பு உள்ளது அதாவது 3 ஆயிரத்தை தொடக்கூடும்

மிகப்பெரிய உச்சம்
சென்னையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு கோவையில் மட்டும் உயர்ந்த நிலையிலேயே இருக்கிறது. கோவையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3632 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி கோவையில் 2117 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த 19ம் தேதி 3250 ஆக உயர்ந்தது. 21ம் தேதி 3243 என்ற நிலையில் இருந்தது. 22ம் தேதி 3165 ஆக குறைந்தது. ஆனால் 25ம் தேதியான நேற்று கிடுகிடுவென உயர்ந்து 3632 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய பொருளாதார நகரமான கோவையில் கொரோனா பாதிப்பு, சென்னையிட விட அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போது சென்னையில் 4041 ஆக உள்ளது.. கோவையில் 3632 ஆக உள்ளது. நோய் தொற்று பாதிப்பால் சென்னையில் தற்போது 47553 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். கோவையில் இந்த எண்ணிக்கை 34253 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications