சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகரா இது? அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.. கண்கலங்க சொன்ன விஷயம்
சென்னை: தமிழ் சினிமாவில் 'கல்ட் க்ளாசிக்' படங்களில் சுப்பிரமணியபுரம் திரைப்படம் , கடந்த 2008-ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தில் 80ஸ்களின் பின்னணியை நம்பகமாக காட்சிப்படுத்திய விதம் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இப்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். அவர் பற்றிய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசையை ஜேம்ஸ் வசந்தன் அமைத்திருந்தார். இன்றும் இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

டும்கான் மாரிமுத்து
இந்தப் படத்தில் 'டும்கான்' என்ற நினைவில் நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. "எனக்கு மட்டும் கால் நல்லா இருந்திருந்தா உங்களை உட்கார வைச்சு சோறு போடுவேன்" என்ற அவரது வசனம் இன்று வரை ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. படத்தில் மைக் செட் கட்டும் ஒருவராக இயல்பாக நடித்திருந்தார்.
வாழ்க்கை பின்னணி
மதுரையைச் சேர்ந்த மாரிமுத்துவின் வாழ்க்கை எளிதானதல்ல. சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த அவர், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன் பின்னர் வாழ்க்கையை நடத்த லைட் மற்றும் மைக் செட் கட்டும் வேலை செய்து வந்தார்.
அவரது இயல்பான தோற்றமும் நடையும் கவனித்த சசிகுமார், 'சுப்ரமணியபுரம்' படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார். முதலில் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து, பின்னர் அவரை தொடர்பு கொண்டு நடிக்க அழைத்துள்ளனர்.
அப்படி கிடைத்த அந்த வாய்ப்பு, படத்தின் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து, கிளைமாக்ஸ் வரை நீளும் கதாபாத்திரமாக மாறியது.
வாய்ப்புகள் குறைவு
இந்தப் படத்திற்குப் பிறகு, மாரிமுத்து காமெடி நடிகராக தொடர்ந்து வாய்ப்புகள் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியான வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை. இதற்கான காரணம் குறித்து அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், "சசிகுமார் அண்ணனின் பெயரை நான் பச்சை குத்திக்கொண்டேன். ஆனால் நான் குடித்துவிட்டு, பார்க்கும் அனைவரிடமும் அண்ணனின் செல்போன் நம்பரை கொடுத்து விட்டேன். அதனால் தான் அவர் என்ன்மீது கோபமாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை போராட்டம்
சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால், மாரிமுத்து வாழ்க்கையை நடத்த பல வேலைகளை செய்துள்ளார். ரேடியோ கடையில் வேலை பார்த்துள்ளார். அதன் பின்னர் ஆட்டோ ஓட்டியுள்ளார். ஆட்டோ பழுதாகி நின்றபோது அதை சரி செய்ய பணமில்லாமல் சிரமப்பட்டுள்ளார். தற்போது, ஆட்டோவை சரிசெய்து மீண்டும் ஓட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோக்களில், அவர் மிகவும் மாறிப்போன தோற்றத்தில் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
குடும்ப வாழ்க்கை
திருவிழாக்களுக்கு ரேடியோ செட் அமைக்க போன இடத்தில் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் மாரிமுத்து. குடும்ப பொறுப்புகளுடன், கிடைத்த வேலைகளை செய்து வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறார். ஆனால், குடிப்பழக்கம் காரணமாக பொருளாதார சிக்கல்களை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு நம்பிக்கை
இவ்வளவு சிரமங்களுக்குப் பிறகும், மாரிமுத்து தனது நம்பிக்கையை இழக்கவில்லை. சசிகுமார் மீண்டும் 'சுப்ரமணியபுரம் 2' எடுக்குமானால், அதில் தமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
ஒரு சின்ன கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த மாரிமுத்து, வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்திருந்தாலும், இன்னும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார். சினிமா ஒரு வாய்ப்பு கொடுத்தாலும், அதை தொடர்ந்து பிடித்துக்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை அவரது வாழ்க்கை நிஜமாக எடுத்துக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications