கனல் கண்ணனுக்கு ஆதரவு.. பெரியார் பற்றி ஆபாசபேச்சு! சிலையை அகற்ற வாட்ஸ்அப் குழு -சென்னை சாமியார் கைது
சென்னை: பெரியார் குறித்து அவதூறாக கருத்திட்டதுடன் அவரது சிலையை அகற்ற வாட்ஸ் அப் குழு தொடங்கி ஆட்சேர்க்கையில் ஈடுபட்ட சிவனடியார் கோபால் என்ற சாமியாரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பெயரில் இந்து முன்னணி அமைப்பு நடத்திய சுற்றுப்பயணத்தின் நிறைவு விழா சென்னையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளருமான கனல் கண்ணன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பேசுகையில், "நாளொன்றுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது கோவிலின் முன்பாக கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என கூறியிருந்தார்.

வலுக்கும் எதிர்ப்பு
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற கனல் கண்ணனின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இரு தரப்பினருக்கிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ள கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கனல் கண்ணனை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழத்தை சேர்ந்தவர்கள் புகாரளித்தனர்.

தலைமறைவு
அந்த புகாரை தொடர்ந்து, கனல் கண்ணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு தகவலை பரப்பி பொதுமக்கள் மத்தியில் விரோதத்தை தூண்டுவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். இதனை தொடர்ந்து கனல் கண்ணன் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

சிவனடியார் கோபால்
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சிவனடியார் கோபால் என்ற சாமியார் கனல் கண்ணனுக்கு ஆதரவு தெரிவித்தும் பெரியாரை கொச்சையான வார்த்தைகளால் அவதூறாக விமர்சித்தும் யூடியூப் சேனலில் பேட்டியளித்து இருந்தார். அத்துடன் தனது ட்விட்டர் பக்கத்திலும் பெரியார் குறித்த அவதூறு பதவை வெளியிட்ட அவர், "திராவிடத்தை வேறறுக்க, ஈவேரா சிலையை அகற்ற இணைவீர் நமது வாட்ஸ் அப் குழுமத்தில்" என்று பதிவிட்டு தனது வாட்ஸ் குழுவின் லிங்கையும் வெளியிட்டுள்ளார்.

சாமியார் கைது
சாமியார் கோபாலின் இந்த சர்ச்சை பதிவு தொடர்பாக சென்னையை சேர்ந்த சையது அலி என்பவர் புகாரளித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து சாமியார் கோபாலின் ட்விட்டர் பக்கங்களை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார், அவர் ஒரு பிரிவினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும், பெரியார் குறித்து கொச்சையான பதிவுகளை வெளியிட்டு வந்ததையும் உறுதி செய்து அவரை கைது செய்தனர்.

குற்றப் பின்னணி
"பிருங்கிமலை ஓம் ஸ்ரீலஸ்ரீ சிவகோபால் சாமிகள்" என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு நடத்தி வரும் கோபால் முன்னதாகவும் பல சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications