சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் பலி.. ரூ. 20 லட்சம் இழப்பீடு.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில், சென்னை கண்ணகி நகர் பகுதியில் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை காரணமாக ஏராளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பாரிஸ், அடையாறு, ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகர், ராஜா அண்ணாமலை புரம், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்த மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார்.
சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் இன்று காலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு சாலையில் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் வரலட்சுமி அங்கு கால் வைத்த போது, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அலட்சியமாக செயல்பட்ட மின்சார வாரியத்தாலே உயிர் போனதாகக் கூறி, அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், வரலட்சுமியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ. 10 லட்சம், ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ. 10 லட்சம் என வரலட்சுமியின் குடும்பத்தினரிடம் ரூ. 20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.
வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications