விருத்தாசலத்தை குறி வைத்த பிரேமலதா.. தொகுதி மாறச் சொன்ன திமுக தலைமை.. என்ன மேட்டர்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அவரை சென்னையில் போட்டியிடுமாறு திமுக தரப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்தச் சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி, மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது.

பிரேமலதா போட்டி
திமுக உடன் கூட்டணியை உறுதி செய்த பின்னர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, "இன்று திமுகவுடன் தேமுதிக கூட்டணியை உறுதி செய்துள்ளோம். தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பியபடி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேமுதிக முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2016-லேயே இந்தக் கூட்டணி அமைந்திருக்க வேண்டும். பழம் நழுவி பாலில் விழும் என்று கருணாநிதி கூறியிருந்தார். ஆனால், அது இப்போது கேப்டன் இல்லாதபோது தாமதமாக நடந்துள்ளது.
இந்தத் தேர்தலில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் போன்றவை எல்லாம் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார். இந்தக் கூட்டணி தேமுதிகவினர், பொது மக்களும் வரவேற்கும் கூட்டணியாக உள்ளது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. இந்த தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்" எனக் கூறி இருந்தார்.
தேமுதிகவுக்கு 7 + 1
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 7 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி திமுக தலைமையிடம் தேமுதிக தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சாய்ஸில் 20 சீட்
கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்துள்ளது.
பிரேமலதா எங்கு போட்டி?
இதில் தேமுதிகவிற்கு 7 தொகுதிகள் தொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனைக்கு பிறகு எந்த எந்த தொகுதியில் தேமுதிக போட்டி என முடிவாகும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது கணவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளான விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில்
ஆனால், திமுக தலைமையோ, பிரேமலதா விஜயகாந்தை சென்னையில் களம் இறங்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுமாறு கூறப்பட்டுள்ளதாம். விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவரை எதிர்த்து களமிறங்க பிரேமலதா தான் சரியான சாய்ஸ் என திமுக நினைக்கிறதாம்.
மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவும் பிரேமலதா விஜயகாந்தை திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாம். சென்னையில் ஒரு தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டால், தமிழகம் முழுவதும் மற்ற வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யவும் வசதி என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications