போதைப்பொருள் விற்பனை.. ’சுந்தரி’ சீரியல் நடிகை மீனா கைது! நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக தகவல்!
சென்னை: சென்னையில் போதை பொருள் விற்பனை செய்ததாக சீரியல் நடிகை மீனா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் வாட்ஸாப் குழு அமைத்து அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே மீனாவிடம் சீரியல் நடிகர் நடிகைகள் சினிமா நடிகர் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த நடிகர், நடிகைகள் யார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக எபித்ரின், மெத்தப்பட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக கடத்தப்படவந்த கோடிக்கணக்கான ரூபாய் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் போதை பொருட்களுடன் பிடிபடும் சம்பவமும் அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் ஒரு இளம் பெண்ணை சோதனை செய்தபோது அவரிடம் 5 கிராம் அளவில் மெத்தபெட்டைமைன் இருந்தது தெரியவந்தது. 2000 ரூபாய்க்கு போதை பொருளை வாங்கி 3000 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் மீனா என்பதும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி என்ற சீரியலில் நடித்து வருவதும் தெரியவந்தது.
அது மட்டுமல்லாமல் ஆர்யா நடித்த டெடி படத்திலும் அவர் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் போதை விற்பனையில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மீனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. போதை பொருளை மொத்தமாக வாங்கி வந்து அவற்றை கிராம் கணக்கில் பிரித்து வைப்பது தான் மீனாவின் வேலை என கூறப்படுகிறது.
மேலும், சினிமா தொடர்பு இருப்பதால் நடிகர் நடிகைகளுக்கும் அவர் போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் இதற்காகவே தனித்தனியாக அவர் வாட்ஸ் ஆப் குழுக்களையும் நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் மீனா கைது செய்யப்பட்டுள்ளதால் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தி வந்தார்களா, அவர்களுக்கு மீனா போதைப் பொருள் சப்ளை செய்தாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதே நேரத்தில் மீனாவுடன் நடத்தப்பட்ட விசாரணையில் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு அவர் போதை பொருள் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் தனி தனியே விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் வரும் காலங்களில் பல நடிகர் நடிகைகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications