சென்னைக்கு வந்தது நாய் இறைச்சியா, ஆட்டுக்கறியா? சர்ச்சைக்கு முடிவு கட்ட போலீஸ் அதிரடி முடிவு
Recommended Video

சென்னை: ஜோத்பூரிலிருந்து, சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது நாய்க்கறி அல்லது ஆட்டுக்கறி தானா என்ற விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 2,000 கிலோ எடையுள்ள இறைச்சிகளை கடந்த சனிக்கிழமை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவை நாய் இறைச்சி என்று குற்றம்சாட்டிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் அவற்றை குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று அழித்துவிட்டனர்.

பெண்மணி
இந்த நிலையில் ஷகிலா பானு, என்பவர் அது தங்கள் உணவகத்திற்காக கொண்டுவரப்பட்ட ஆட்டு இறைச்சி தான் என்றும், நாய் இறைச்சி என்பது தவறான தகவல் என்றும், செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.

இறைச்சி அகற்றம்
உணவு பாதுகாப்பு அதிகாரிகளை பொறுத்த அளவில் இறைச்சியின் வால் பகுதி மிகவும் நீண்டு காணப்படுவதன் காரணமாக, அது நாய் இறைச்சியாக, இருக்கலாம் என்று உடனடியாக முடிவெடுத்து அதனை அழித்து விட உத்தரவிட்டனர். ஆனால் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறைச்சி, சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

தனிப்படை
இந்த நிலையில்தான் பெண்மணி ஷகிலா அளித்த பேட்டி முக்கியத்துவம் பெற்றது. இதனால் தற்போது காவல்துறையும் குழம்பி உள்ளது . ஜோத்பூர் நகரில் இருந்து இந்த இறைச்சியை சென்னைக்கு அனுப்பி வைத்தார்களிடமே, சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

தகவல்கள்
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து நாய் இறைச்சியா, ஆட்டு இறைச்சியா என்பது குறித்த சரியான தகவல்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இப்போது சர்ச்சை எழுந்துள்ளதன் காரணமாக இதை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில், தனிப்படை ஒன்று ஜோத்பூர் நகருக்கு சென்று விசாரணை நடத்த உள்ளது, என்று தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் வால்பகுதி நீண்டதாக உள்ள ஆட்டு இனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications