ஆசிரியைகளை பாத்ரூமுக்குள் பூட்டி.. கொடுமைப்படுத்திய ப்ளஸ் 2 மாணவர்கள்! பரபர சம்பவம்! பாய்ந்த ஆக்சன்
சென்னை: ஆசிரியைகளை பாத்ரூமுக்குள் வைத்து பூட்டி வைப்பது; மாணவிகளை கிண்டல் செய்வது போன்ற அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட 3 மாணவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
சமீபகாலமாக பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் அராஜக செயல்கள் எல்லை மீறி வருகின்றன. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களை கிண்டல் செய்வது, அவர்களை தாக்குவது என்பன உள்ளிட்ட செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதுதொடர்பான பல வீடியோக்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 'கெத்து' என நினைத்துக் கொண்டு சில மாணவர்கள் செய்யும் செயல்கள், அவர்களின் எதிர்காலத்தை தான் பாதிக்கப் போகிறது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.

அந்த வகையில், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் தொடர்ந்து ரவுடியிஸம் செய்து வந்த மாணவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பிளஸ் 2 பயிலும் 3 மாணவர்கள் பள்ளியில் தொடர்ந்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிற மாணவர்களை தாக்குவது, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பது, மாணவிகளை கிண்டல் செய்வது என ஒழுங்கீனமாக நடந்து வந்துள்ளனர்.
இந்த மாணவர்கள் மீது பல ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இதன்பேரில், தலைமை ஆசிரியர் அந்த மாணவர்களை அழைத்து பல முறை எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எனினும், அதனை சட்டை செய்யாத அந்த 3 மாணவர்கள் தொடர்ந்து பள்ளியில் அட்டூழியம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலையில் பள்ளி தொடங்கிய சில நேரத்தில் கழிப்பறை கதவுகள் நீண்டநேரமாக தட்டப்படும் சத்தம் கேட்டது. இதையடுத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கழிப்பறை இருக்கும் இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது சில ஆசிரியைகளை பாத்ரூமுக்குள் வைத்து பூட்டிவிட்டு இந்த 3 மாணவர்களும் வெளியே நின்று கொண்டிருந்தனர். பாத்ரூம் கதவுகளை திறக்க முயன்ற பிற ஆசிரியர்களுக்கு அந்த மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
மாணவர்களின் அராஜகம் கட்டுப்பாடின்றி செல்வதை உணர்ந்த தலைமை ஆசிரியர், இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், பாத்ரூமுக்குள் பூட்டப்பட்டிருந்த ஆசிரியைகளை விடுவித்தனர். அப்போது போலீஸாரை பார்த்து அங்கிருந்த தப்பியோட முயன்ற 3 மாணவர்களை காவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அந்த மாணவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் போலீஸார் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications