ரயிலில் ஆபீஸ், காலேஜுக்கு போறீங்களா? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க! சென்னை ரயில் நேர அட்டவணை மாற்றம்!
சென்னை: சென்னையில் அன்றாடம் அலுவலகம் செல்லவும், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லவும், கூலி வேலைகளுக்குச் செல்லவும் தினசரி 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், புறநகா் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இயக்கப்படும் புறநகர் மற்றும் மின்சார ரயில் சேவைகள் பயணிகளின் வசதிக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் ரயில் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்படும். அதன்படி சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் புதிய அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணையின் படி மின்சார ரயில் சேவைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.

சென்னை போக்குவரத்து சேவையில் மின்சார ரயில் சேவை பெரும் பங்கு வகிக்கிறது. சென்னை நகர்ப் பகுதிகளில் இருப்பவர்கள் புறநகர் பகுதிக்கு செல்லவும், புறநகரில் இருந்து சென்னைக்குள் வரவும் மின்சார ரயில் சேவை பிரதானமாக இருக்கிறது. தினமும் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளை இணைப்பதில் மின்சார ரயில் சேவை மிக முக்கிய பங்காற்றுகிறது. அலுவலகம் செல்பவர்கள் தொடங்கி பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள், கூலி வேலைகளுக்குச் செல்பவர்கள் என காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையின் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைபோதும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதிகளுக்கும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கும் 7 முதல் 15 நிமிடங்கள் இடைவெளியில் மின்சார ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சேவை அட்டவணை பயணிகளின் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்கப்படும்.
அந்த வகையில் புதிய அட்டவணையை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை சென்ட்ரல், வேளச்சேரி, சென்னை கடற்கரையில் இருந்து ஆவடி, பட்டாபிராம், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பகுதிகளுக்கு 128 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 124 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு இடையே 124 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8 ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு 116 ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 8 ரயில்கள் நீக்கப்பட்டதுடன் சில ரயில்களின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு தினமும் முதலில் 80 பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு அது 70 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருத்தப்பட்ட அட்டவணையின் படி அது 61 ரயில்களாக அது குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அட்டவணையின்படி, சென்னை புறநகரம் மின்சார ரயில் சேவையில் எந்த ஒரு புதிய ரயிலும் அறிவிக்கப்படவில்லை. பயணிகளின் வசதிக்கு ஏற்ப ஏற்கனவே இயங்கும் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்டம் கொண்டு வந்துள்ள இந்த மாற்றம் பயணிகள் நெரிசலை அதிகப்படுத்துமா, வசதியாக இருக்குமா என்பது போகப் போக தெரியும்.












Click it and Unblock the Notifications