சென்னை மக்களே இன்றும், ஜூன் 16, 19ம் தேதிகளில் 17 புறநகர் ரயில் சேவைகள் ரத்து.. லிஸ்டை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் இன்று (ஜூன் 14) மற்றும் ஜூன் 16, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனால், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில், ஐடி துறை என பல்வேறு தேவைகளுக்காக அண்டை மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வசித்து வருகின்றனர். சென்னை மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன.

சென்னை பயணிகளுக்கு புறநகர் மின்சார ரயில் சேவைகள் என்பது பெரும் வரப்பிரசாதமாகும். சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையென்றால் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது.
இந்த ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் ஜூன் 14 (சனிக்கிழமை), 16, 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமிப்புப் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஜூன் 14, 16, 19 ஆகிய தேதிகளில் காலை 11.20 முதல் பிற்பகல் 3.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, அந்த நாள்களில் காலை 9.40 முதல் பிற்பகல் 3.50 வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதேபோல, கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் -ஆவடி என இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.
பகுதி ரத்து: அதே நாள்களில் செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரையுடன் நிறுத்தப்படும். அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும். இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையில் இருந்து பொன்னேரி, எண்ணூருக்கும் இடையே மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications