சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு! நடுவழியில் நின்ற ரயில்கள்! அரக்கோணம் ரூட்டில் தவித்த பயணிகள்
சென்னை: சென்னையில் அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் திடீரென மின்சார தொடர்பில் ஏற்பட்ட பழது காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. இதனால் கடும் அவதிக்கு உள்ளான பயணிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் அப்படியே நின்றதால் பொறுமை இழந்த பயணிகள் சிலர் தண்டவாளத்தில் இறங்கி அருகில் இருந்த பேருந்து நிலையங்களுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து பேருந்துகள் மற்றும் ரயில்களில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

நடுவழியில் நின்ற ரயில்கள்
சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் சேவை ஒன்றரை மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை செண்ட்ரலில் இருந்து அரக்கோணம் புறப்பட்ட மின்சார ரயில் இரவு 7.45 மணியளவில் திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே வந்த போது மின்சார தொடர்பில் பழுது ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால், ரயில்கள் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அரக்கோணம் மார்க்கத்தில் வந்த பிற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
பயணிகள் கடும் அவதி
ஒன்றை மணி நேரத்திற்கும் மேலாகியும் கோளாறு சரி செய்யப்படாததால் அதிருப்தி அடைந்த பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயில்கள் அப்படியே நின்றதால் பொறுமை இழந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி அருகில் இருந்த பேருந்து நிலையங்களுக்கு சென்று பேருந்துகள் மற்றும் ரயில்களில் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே, கோளாறை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. கோளாறு சீர் செய்யப்பட்ட பிறகு ரயில்கள் புறப்பட்டு சென்றன. சென்னையின் முக்கிய வழித்த்தடங்களில் ஒன்றான அரக்கோணம் ரூட்டில் பீக் நேரத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.
பயணிகள் கோரிக்கை
பெண்களும் முதியவர்களும் கடும் சிரமத்திற்குள்ளான நிலையில், இது போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க ரயில்வே போதிய முன்னெச்சரிக்கையுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications