டாப்பில் உயருது தி.நகர்.. அண்ணா சாலை டூ உஸ்மான் ரோடு பாலம் பலே வேகம்.. ஆமா, வண்டியை திருப்புறாங்களாமே
சென்னை: அண்ணாசாலை - தி.நகர் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள், துரிதமாகி உள்ளன.. வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கும்வகையில், இந்த பாலத்தை விரைந்து கட்டி முடிப்பது என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உஸ்மான் சாலை மேம்பாலம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று, நீண்ட காலமாகவே கோரிக்கை எழுந்தவண்ணம் இருந்தது..

இது தொடர்பாக அந்த தொகுதியின் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி, தமிழக அரசிடம் வலியுறுத்தியிருந்ததையடுத்து, இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்தார்.. பிறகு, கடந்த 2021ல், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
அரசாணை: உஸ்மான் சாலை மட்டுமல்லாது போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க ரூ.335 கோடி செலவில் 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

இதில், உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து அண்ணாசாலை சிஐடி 1வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகளும் ஆரம்பமாகிவிட்டன.. அதாவது, உஸ்மான் ரோடு பாலத்தையும், அண்ணா சாலையையும் இணைக்கும் வகையில் இந்த புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மொத்தம் ரூ.131 கோடி மதிப்பில், 55 தூண்களுடன் 7.5 மீட்டர் அகலத்தில் 2 வழி பாதையுடன் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.. இப்போதைக்கு பாதிக்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துவிட்டதாம்.. இனிமேல்தான், தி.நகர் ரங்கநாதன் தெருவை ஒட்டியுள்ள பாலத்தின் இணைப்பு பணிகளையும் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

பிரம்மாண்டம்: ரங்கநாதன் தெரு சந்திப்பில் பாலம் சாய்வாக இறங்கும் இடத்தை இடித்து விட்டு, அந்த பகுதியில் உயரமான பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.. இதற்காக 120 மீட்டர் தூர தாழ்வான பாலத்தை இடிக்கும் பணிகள் நடந்து வருவதால், தி.நகர் உஸ்மான் ரோடு பாலம் மூடப்பட்டு, போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, உஸ்மான் ரோட்டிலிருந்து, தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.. மேம்பாலம் வழியாக சென்ற வானங்கள், பிரகாசம் சாலை, பர்கிட் சாலை வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு செல்கின்றன..
ஜங்ஷன்: அதேபோல, சிஐடி ரோட்டிலிருந்து வடக்கு உஸ்மான் ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள், தென்மேற்கு போக் சாலை வழியாக கண்ணம்மாபேட்டை ஜங்ஷனுக்கு சென்று, வெங்கட் நாராயணா சாலை வழியாக, உஸ்மான் ரோட்டுக்கு செல்லலாம்.
தி.நகர் பகுதிக்கு செல்பவர்கள் இப்போது மூடப்பட்டுள்ள பாலம் வழியாகவே செல்வார்கள்... ஆனால், தி.நகர் எப்போதுமே மிகவும் பிஸியான பகுதி என்பதால், இந்த பாலமும் மூடப்பட்டுவிட்டதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படாத வகையில், மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தீவிர யோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்..
சபாஷ்: இதெல்லாம் தற்காலிக சிரமம் என்றாலும், இந்த பிரம்மாண்டமான பாலம் மட்டும் தயாராகிவிட்டால், அண்ணாசாலையில் உயர்மட்ட மேம்பாலம் சென்னையின் இன்னொரு கம்பீரமாக திகழக்கூடும்.. அத்துடன், வாகன ஓட்டிகளுக்கான நேரமும் மிச்சப்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications