1980களின் சென்னை தி.நகரா இது.. கருணாநிதி, எம்ஜிஆர் செம மாஸ்! டைம் டிராவல் செய்ய வைக்கும் புகைப்படம்!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட பட்டாசுகள், பலகாரங்களின் படங்களுக்கு இணையாக 80களில் எடுக்கப்பட்ட சென்னை தியாகராயர் நகரின் புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தீபாவளி என்றாலே சென்னை வாசிகளின் நினைவுக்கு அதிகம் வருவது தியாகராயர் நகர்தான். ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், சாலையோரக் கடைகள் ஆயிரக்கணக்கான கடைகள் அணிவகுத்து எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் தி நகர் எனப்படு தியாகராயர் நகர், இந்த தீபாவளிக்கு களைகட்டியது. ஒரு அடி எடுத்து வைக்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு மனித தலைகளால் நிரம்பியது. இப்படிப்பட்ட தி நகர் 80 களில் எப்படி இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறி அதன் பழைய புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அதில் ஒரு கடையில் அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி படத்துடன் அன்பழகன் பழக்கடை என்ற போர்டு உள்ளது. அது மறைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் தந்தையும் திமுக பிரமுகருமான பழக்கடை ஜெயராமனின் கடை என்று நெட்டிசன்கள் தெரிவித்து உள்ளார்கள். மறுபக்கம், அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். படத்துடன் முத்து பழக்கடை உள்ளது. பழைய பல்லவன் பேருந்துகளும், லியோ காபி விளம்பரமும், சைக்கிள் ரிக்சாக்களும், மாடி இல்லாத ஓட்டு கட்டிடங்களும் 40 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையை நினைவுப்படுத்துகின்றன. .
இதுகுறித்து எழுத்தாளர் விநாயக முருகன் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளதாவது, “நேற்று இந்த படத்தை பலரும் பகிர்ந்திருந்தார்கள். 90 கிட்ஸ்கள், 2கே கிட்ஸ்கள் பலருக்கு இந்தப்படம் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கலாம். இந்தப் படத்துக்கு பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த புகைப்படம் எடுத்த வருடங்களிலிருந்து சில பத்தாண்டுகள் பின்னோக்கிச் சென்று தமிழகத்தின் கருப்பு + வெள்ளை புகைப்படங்களை பாருங்கள்.
அந்த புகைப்படங்களில் பெரும்பாலும் பிராமணாள் கபே என்று இருக்கும். கோவில்கள் இருக்கும். தெருக்களில் பஞ்சக்கச்சம் கட்டி நடந்துச்செல்லும் ஆண்களின் புகைப்படம் இருக்கும். திண்ணைகளில் கட்டுக் குடுமியோடு உட்கார்ந்து படிக்கும் சிறுவர்களின் புகைப்படம் இருக்கும். 70 களுக்கு பிறகு தமிழ்நாட்டில் அநேக வீடுகளில் அண்ணா, கலைஞர், எம்ஜியார் போட்டோக்கள் இருக்கும். ஒரே வீட்டில் கணவன் உறவினர் திமுகவாகவும், மனைவி உறவினர் அதிமுகவாகவும் கூட இருப்பார்கள்.
தமிழ் மகனின் வெட்டுப்புலி நாவலில் இதுபோன்ற சம்பவம் வரும். எனது அம்மாவுடன் பிறந்த சகோதர்கள் ஐந்து பேர்கள். சில வருடங்கள் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்தார்கள். அவர்கள் வீட்டில் அண்ணா, கலைஞர், எம்ஜியார் போட்டோக்கள் இருக்கும். கும்பகோணத்தில் இருந்த பிராமணாள் கபே போர்டு எல்லாம் கொஞ்ச கொஞ்சமாக மாறி தேநீர்க்கடைகளில் அன்பழகன், கிட்டு என்றெல்லாம் பெயர்ப்பலகைகள் மாறின. எனது ஒரு தாய்மாமாவின் பெயர் கிட்டு. அவர் திமுக. இன்னொருத்தர் எம்ஜியார் விசுவாசி.
திருமணத்தில் பரிசுப்பொருட்களாக அண்ணா, கலைஞர், எம்ஜியார் போட்டோக்களை கண்ணாடி பிரேம் செய்து கொடுக்கும் பழக்கம் இருந்தது. சிறு, பெருநகரங்களில் அண்ணா நூலகம் ஆரம்பித்தார்கள். அதுவரை பிராமணர்கள் மட்டும்தான் செய்தித்தாள் வாங்கி படித்ததாக அப்பா சொல்வார். எல்லாரும் தினசரிச் செய்தித்தாள் படித்து அரசியலை விவாதிக்கும் இடமாக இந்த படிப்பகங்கள், தேநீர்க் கடைகள் மாறின. ஒரு தலைமுறை படிக்கத் தொடங்கிய முக்கியமான காலக்கட்டம் இது.” என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications