சென்னை காவலர் குடியிருப்பில் கொத்தாக பெயர்ந்து விழுந்த மேற்கூரை.. பீதியில் குடியிருப்புவாசிகள்
சென்னை திருமுல்லைவாயலில் காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டின் படுக்கையறையில் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது.
சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டின் படுக்கையறையில் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. அந்த அறையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் காவலர் குடியிருப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அக்குடியிருப்பில் சுமார் 900 வீடுகள் வரை உள்ளன. அவற்றில் காவல்துறையில் பணியாற்றுபவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவலர் குடியிருப்பின் 5-வது மாடியில் அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் பாக்கியலட்சுமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் பணிக்கு சென்று விட்ட நிலையில் கணவர் , குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டில் முன் அறையில் இருந்துள்ளனர்.
அப்போது படுக்கை அறையின் சிமெண்ட் மேற்கூரை திடீரென முழுவதுமாக பெயர்ந்து விழுந்தது . அங்கிருந்த கட்டிலில் மேற்கூரைகள் விழுந்தது. நல்லவேளை அந்த அறையில் அப்போது யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருமுல்லைவாயலில் புதிதாக கட்டப்பட்ட இக் குடியிருப்புக்கு அனைவரும் வந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது.இந்நிலையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications