படுக்கை அறையில் கண்ட காட்சி.. நள்ளிரவில் அலறிய மனைவி.. சென்னையில் காவலர் விபரீத முடிவு
சென்னை: சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த காவலர், திடீரென மனைவியிடம் கோபித்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் 29 வயதாகும் ஜார்ஜ் . இவர் ஆவடியில் உள்ள 5-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை கோபாலகிருஷ்ணன் குடும்பத்துடன் திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். அங்கிருந்து சென்னைக்கு குடியேறி வீடு கட்டி வசித்து வருகிறார்கள்.

ஜார்ஜ் காவலரான நிலையில் கன்னியாகுமரியில் வசிக்கும் தனது உறவினர் மகளான பிரானா (வயது 29) என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு தன்வி (வயது 4) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு ஜார்ஜ் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், அவருக்கு காவலர் குடியிருப்பில் வீடு கிடைத்தது. இதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எஸ்.எம். நகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
ஜார்ஜ்க்கு குடிபழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம். அதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஜார்ஜ்க்கும் அவரது மனைவி பிரானாவிற்கும் நேற்று அதிகாலை சண்டை வந்துள்ளது. வழக்கம் போல் ஜார்ஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் சண்டை வந்துள்ளது. மது போதையில் இருந்த ஜார்ஜ் மனைவி திட்டியதால் சாகப்போவதாக கூறியிருக்கிறார்.
மது அருந்தி பின்னர், அடிக்கடி ஜார்ஜ் 'நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்று கூறி வந்துள்ளார். ஆனால் ஒன்றும் செய்ய மாட்டார். அதனால் எப்போதும் வழக்கம் போல் அப்படித்தான் சொல்லுகிறார் என்று நினைத்த பிரானா தனது குழந்தையுடன் வீட்டின் ஹாலில் படுத்து தூங்கிவிட்டார். ஜார்ஜ் படுக்கையறைக்கு தூங்குவதற்காக சென்றுள்ளார்.
இதனிடையே கணவரின் சத்தம் அரைமணி நேரமாக வரவில்லை. இதனால் அரை மணி நேரம் கழித்து பிரானா எழுந்து படுக்கையறைக்கு சென்று பார்த்த போது ஜார்ஜ் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், நள்ளிரவில் அலறல் சத்தம் கேட்கிறதே என்று ஓடிவந்து பார்த்துள்ளனர். அங்கு ஜார்ஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனே திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் உயிரிழந்த ஜார்ஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவலர் ஜார்ஜின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமுல்லைவாயல் காவலர் குடியிருப்பில் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications