சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 7 மணி வரை இடி, மின்னல், மழை... வானிலை மையம் எச்சரிக்கை!
Recommended Video
சென்னை : சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்பில்லர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. முகப்பேர் பகுதியில் கடந்த அரை மணி நேரமாக மழை கொட்டித் தீர்க்கிறது.
சென்னை எண்ணூர், திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு பகுதிகளில் மழை பெய்கிறது. புறநகர்ப்பகுதிகளான குமணன்சாவடி, பூந்தமல்லியிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பள்ளி விடும் நேரத்தில் மழை தொடங்கியதால் மாணவர்கள் நனைந்தபடியே வீடு திரும்புகின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்வதால் வெளியே சென்ற மக்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி வரை இந்த நிலை இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.