சென்னையில் மகளை பலாத்காரம் செய்த அப்பா! மன்னிச்சி விட்டுடுங்கம்மா! தாயிடம் பஞ்சாயத்து பேசும் போலீஸ்
சென்னை: சென்னை 13 வயது சிறுமியை தந்தையும் பெரியப்பா மகனும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்டதால் அந்த விஷயத்தை பெரிதுப்படுத்தாமல் மறந்துவிடுமாறு போலீஸாரே பஞ்சாயத்து பேசுவதாக சிறுமியின் தாய் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரை பெற்ற தந்தையும் அண்ணன் முறையான பெரியப்பா மகனும் சேர்ந்து 9 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் 4 நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகின்றன. எனக்கும் என் கணவருக்கும் குடும்பத் தகராறு என்பதால் நான் அவரை விட்டு பிரிந்து 6 ஆண்டுகளாக தனியாகவே வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறார்.
அவர் இரு ஆண்டுகள் என் கணவருடன் எனது மாமியார் வீட்டில் வசித்தார். இந்த 2 ஆண்டுகளில் என் மகள் பூப்பெய்த நாள் முதல் 9 மாதங்களாக, சிறுமியின் தந்தையும் சிறுமிக்கு அண்ணன் முறையாகும் பெரியப்பா மகனும் சேர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தனர். இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றே நான் புகார் கொடுத்தேன்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும் என் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த கொடுமைக்காரர்களை கைது செய்யவே இல்லை. என் பிள்ளை வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. இதனால் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், "நீங்கள் புகாரை எடுக்கிறீர்களா, இல்லை இந்த ஸ்டேஷன் வாசலில் நான் உயிரை விடவா" என கேட்டேன்.
அதற்கு அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர், ஒரு பேப்பரை தூக்கி போட்டு, "இந்தா இதில் புகாரை எழுது" என சொன்னார். நானும் சிறுமியின் தகப்பன், அண்ணன் பெயரை போட்டு நடந்தவற்றை எழுதிக் கொடுத்தேன். அப்போது அங்கிருந்த பெண் போலீஸ், "ஏம்மா அதான் அந்த அண்ணன்காரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டானே, பெத்த அப்பன்தானே, மன்னித்துவிட்டுவிடு, இதை ஏன் பெரிதுப்படுத்துறே" என என்னை கேட்கிறார்கள். என் குழந்தைக்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டும். என் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என அந்த தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போனதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதற்கேற்ப சிறுமி மீதான பாலியல் பலாத்கார சம்பவத்தின் மீது கூட போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் மனசாட்சியே இல்லாமல் மன்னித்துவிடு என்கிறார்கள். இதே போல் சென்னையில் அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் , புகார் அளித்த பெற்றோரையே தாக்கியதாகவும் தாயின் நடத்தை மீது சந்தேகம் என வழக்குப் பதிவு செய்துவிடுவதாக போலீஸார் மிரட்டியதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த 12 ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications